மாவோயிஸ்ட் கூட்டாளிகள் எங்கே கோவையில் 6 பேருக்கு என்.ஐ.ஏ., வலை


சென்னை:மாவோயிஸ்ட் சந்தோஷ்குமார் அளித்த தகவலின் படி, கோவையைச் சேர்ந்த மேலும் ஆறு பேரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அங்கலகுறிச்சியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 45; மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பதுங்கி இருந்தார். இவரை, தமிழக போலீசார் உதவியுடன், கடந்த பிப்ரவரியில் கேரள மாநில நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.


சந்தோஷ்குமாரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.



என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: சந்தோஷ்குமார், கேரள மாநிலம், கபினி தள மாவோயிஸ்ட் இயக்க தலைவராக செயல்பட்டுள்ளார். கடந்த, 2014ல் வீட்டை விட்டு வெளியேறிய சந்தோஷ்குமாரை, பொள்ளாச்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர்தான் மூளைச்சலவை செய்து, மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்த்து விட்டுள்ளார்.


சில ஆண்டுகளுக்கு முன், தமிழக - கேரள எல்லைக்கு அருகே, மலப்புரம், கண்ணுார், பாலக்காடு வனப் பகுதியில் ஊடுருவி, மானந்தவாடியில் வனத் துறையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை, சந்தோஷ்குமார் முன்னின்று நடத்தி உள்ளார்.


சந்தோஷ்குமார் பின்னணியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட்டுகளான ரூபேஸ், அவரது மனைவி சைனா, கணபதி, சிகாமணி, செல்வராஜ் ஆகியோரும் இருந்துள்ளனர்.


அவர்கள் தலைமையில் செயல்படும் மாவோயிஸ்ட் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் குறித்த தகவல்களையும், சந்தோஷ்குமார் தெரிவித்து உள்ளார். அதன் அடிப்படையில் தேடுதல் பணி நடக்கிறது.


சந்தோஷ்குமார் வழி காட்டுதல்படிதான், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் கார்த்திக், 36, சென்னையில் தங்கி ஆள் சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக கார்த்திக், தன் பெயரை ராஜேஷ், குமார், கவுதம் கார்த்திக் என, மாற்றியுள்ளார். கார்த்திக்கையும், கடந்த மாதம் பிப்ரவரியில் கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement