அந்தோரியம்மன் கோவில் குளம் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் துாக்கம் கலையுமா? அதிகாரிகள் துாக்கம் கலையுமா?

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில், அந்தோரியம்மன் கோவில் குளம், 2.50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

இந்த குளத்தை ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், அகூர் கிராமவாசிகள், இந்த குளத்து தண்ணீரை குடிநீராகவும், சமையல் செய்யவும் பயன்படுத்தி வந்தனர்.

அதன்பின் முறையாக பராமரிக்காததால், குளத்தில் உள்ள தண்ணீரில் அப்பகுதிவாசிகள் துணிகள் துவைத்தும், கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த குளத்தில் தண்ணீர் நிரப்பியிருந்தால், அகூர் கிராமம் மற்றும் காலனி பகுதியில் குடிநீர் பிரச்னை தீர்ப்பதுடன், விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.

கடந்த 2011ம் ஆண்டு, 5 லட்சம் ரூபாயில் குளம் துார்வாரி சீரமைக்கப்பட்டது. அதன்பின், ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், ஆங்காங்கே தனிநபர்கள் சிலர் குளத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

இதன் காரணமாக, குளத்திற்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய் மாயமாகி வருகின்றன. அகூர் ஏரியில் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன. தற்போது, குளத்தில் அதிகளவில் செடிகள் வளர்ந்தும், கரைகள் சேதமடைந்துள்ளன.

எனவே, மாவட்ட நிர்வாகம் அந்தோரிஅம்மன் கோவில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement