ம.பொ.சி., நகரில் சாலை சேதம் குடியிருப்புவாசிகள் கடும் அவதி

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜே.என்.சாலையை ஒட்டி, நான்காவது வார்டில் ம.பொ.சி., நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில், 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
நகராட்சியை எல்லையை ஒட்டி அமைந்துள்ள இக்குடியிருப்பு பகுதியில், எஸ்.பி.ஐ., வங்கி மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. அருகிலேயே தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு, கடந்த 19 ஆண்டுக்கு முன் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. அதன்பின், சாலையை முறையாக காக்களூர் ஊராட்சி நிர்வாகம் பராமரிக்கவில்லை. சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய், முறையாக அமைக்காததால், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி வருகிறது.
மழைக்காலத்தில் கழிவுநீருடன் கலந்து மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கி விடுகிறது. மேலும், மழைநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையின் இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகிறது.
இது, அவ்வழியாக செல்லும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் டயர்களை சேதப்படுத்தி வருகின்றன.
மேலும், இவ்வழியாக செல்லும் பாதசாரிகளையும், இரும்பு கம்பி பதம்பார்ப்பதால் காயமடைந்து வருகின்றனர். முறையாக குப்பையை அகற்றாமல், ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
எனவே, மாவட்ட கலெக்டர் அப்பகுதியில் ஒரு முறை ஆய்வு செய்து, சேதமடைந்த சாலை மற்றும் மழைநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ம.பொ.சி., நகர்வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.