அரசு பள்ளியில் இயற்கை காய்கறி தோட்டம் 120 கிலோ காய்கறி அறுவடை செய்து அசத்தல்

கரூர்:கரூர் மாவட்டம், புகழூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 467 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் இயற்கை முறையில் காய்கறித் தோட்டம், நர்சரி, மூலிகை தோட்டம் அமைத்துள்ளனர். மாணவர்களே தோட்டங்களை பராமரிக்கின்றனர். இதில், காய்கறி அறுவடை மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து, பள்ளியின் தாவரவியல் ஆசிரியரும், பசுமைப்பள்ளி ஒருங்கிணைப்பாளருமான ஜெரால்டு ஆரோக்கியராஜ் கூறியதாவது:
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பசுமை பள்ளி திட்டத்தில், பள்ளியின் பின்புறத்தில், மாணவர்களால் கத்தரி, பச்சை மிளகாய், வெண்டை, தக்காளி, பூசணி உள்ளிட்ட நாட்டுரக காய்கறி விதைகளை விதைத்தோம்.
பள்ளிக்கு முன்புறத்தில், லெமன் க்ராஸ், துாதுவளை, அகத்திக்கீரை, கரிசலாங்கண்ணி, ஆடாதொடா, துளசி உள்ளிட்ட, 20 வகையான மூலிகை செடிகள் நடப்பட்டன. இவை அனைத்துக்கும் தணணீர் பாய்ச்ச சொட்டு நீர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்களைக் கொண்டு இந்த செடிகளுக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை மக்கிய குப்பையை உரமாக போட்டோம். செடிகளை பூச்சிகள் தாக்கினால், வேப்ப எண்ணெயை ஸ்ப்ரே செய்தோம்.
செயற்கை உரங்களை கைப்பிடி அளவுக்குக்கூட பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.
இயற்கை காய்கறி தோட்டத்தில் இரண்டு மாதத்திற்கு முன் காய்கறிகள் காய்ப்புக்கு வந்தது. இதில், நேற்று முன்தினம், 15 கிலோ கத்தரிக்காய், 10 கிலோ பூசணிக்காய், 1 கிலோ வெண்டை மற்றும் அகத்திக்கீரை அறுவடையானது.
இதை ஆசிரியர்களிடம் விற்பனை செய்தோம். இதுவரை, 120 கிலோவுக்கு மேல் காய்கறி அறுவடை செய்யப்பட்டுள்ளது. தக்காளி செடிகள் இப்போதுதான் காய்க்கும் பருவத்துக்கு வந்துள்ளன. விரைவில் அதிலும் அறுவடையைத் தொடங்கிவிடுவோம். அடுத்து, பச்சை மிளகாயும் அறுவடைக்கு வந்துவிடும்.
மாணவர்களிடம் இயற்கை குறித்த புரிதலும், இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வும் இதன்முலம் வந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.