நிதியின்றி கிராம ஊராட்சிகள் திணறல் அடிப்படை வசதிகள் சீரமைப்பில் சிக்கல்

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியத்தில், 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் போதுமான நிதி இல்லாததால் குடிநீர், கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளுக்கு, பகுதிவாசிகள் அல்லல்பட்டு வருகின்றனர்.
தற்போது, ஊராட்சி செயலர்கள் வீடு, தொழில், பிளான் அப்ரூவல் வாயிலாக கிடைக்கும் வருவாயை மட்டுமே பெற்று அரசுக்கு வரி செலுத்தி வருகின்றனர்.
அந்த நிதியையும் ஊராட்சிகள் செலவிட முடியாத நிலை உள்ளது.
இதனால், மாதந்தோறும் அரசு சார்பில் வழங்கும் குறைவான நிதியால், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
இதனால், பல ஊராட்சிகளில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு மற்றும் குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியாமல், ஊராட்சி செயலர்கள் புலம்பி வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சி பகுதிகளில் ஆய்வு செய்து, கழிவுநீர் கால்வாய், குடிநீர் போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.