செல்லும் ஊர் பெயரை காட்டாத டிஜிட்டல் பலகை பரிதவிக்கும் பயணிகள்; பஸ் கண் முன் நின்றும் தவறவிட்டு புலம்பும் மக்கள்

மாவட்டத்தில் அரசு டவுன் பஸ் சேவையில் ஒரே பஸ் சில வழித்தடங்களுக்கு இயக்கப்படும் நிலை பரவலாக உள்ளது. இந்த பஸ்களில் இருக்கும் டிரைவர், கண்டக்டர்கள் எந்த ஊருக்கு பஸ் செல்கிறதோ அந்த ஊரின் பெயர் பலகைகளை பஸ்சில் முகப்பு, பின் பகுதியில் பொறுத்திய பின்னர் இயக்குவர்.
அதே வழித்தடத்தில் குறிப்பிட்ட ஊருடன் திரும்பி வரும் நிலை என்றால் அந்த ஊரின் பெயர் பலகை பஸ்சின் முகப்பு, பின் பகுதியில் இருக்கும். தற்போது மாவட்டத்தில் ஏகப்பட்ட பஸ்கள் மிகவும் பழுதாகி 'தட தட' சத்தத்துடன் இயக்கப்படுவதால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. பெண்களுக்கு இலவச பயண சலுகையால் வருமானம் குறைவதால் இதுபோன்ற அவல நிலை இருப்பதாக மக்களிடம் கருத்து உள்ளது.
இதனால் ஒரே நாளில் எல்லா பஸ்களை மாற்ற முடியாது என்பதால் படிப்படியாக புதிய பஸ்களை வாங்கி பல வழித்தடங்களில் விடும் பணியும் மும்முரமாக நடக்கிறது.
தற்போது வரும் புதிய பஸ்களில் ஊர் பெயர்களை காட்டும் அறிவிப்பு பலகை என்பது டிஜிட்டல் வடிவில் உள்ளது. இதில் எந்த வழித்தடத்திற்காக பஸ் இயக்கப்படுகிறதோ அந்த ஊர் விபரம் மட்டும் உள்ளது.
பல வழித்தடங்களில் இந்த பஸ்கள் கூடுதலாக ஒரிரு சில டிரிப்கள் மட்டும் செல்லும். சில கி.மீ., துாரம் நீட்டிப்பாக வேறு ஊருக்கும் சென்று வருகின்றன.
ஆனால் கூடுதல் துாரத்திற்கு செல்லும் ஊரின் பெயர் பஸ்சின் டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் வருவதில்லை. அதே போல் சில டிரிப்கள் வழக்கமான பயண துாரத்தை தவிர்த்து முக்கிய பெரிய ஊருடன் 'கட்' சர்வீஸாக திருப்பி இயக்கப்படும் நிலையும் உள்ளது.
அப்போது ஊர் பெயர் மாற்றம் இல்லாமல் இருப்பதால் ஒவ்வொரு முறையும் கண்டக்டர்கள் பஸ்சில் ஏறும் ஒவ்வொரு பயணியிடமும் இந்த விபரங்களை தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது.
பஸ்சின் முகப்பில் முறையான ஊர் பெயர் விளக்கம் இல்லாததால் பஸ் தங்களை கடந்து சென்ற பின்னர் பஸ் சென்ற விபரமறிந்து புலம்புகின்றனர். இதை கருத்தில் கொண்டு டிஜிட்டல் பெயர் பலகையில் பஸ் செல்லும் ஊர் பெயர்களை குறிப்பிட வேண்டும்.இதை போக்குவரத்து துறையினரும் கண்காணிக்க வேண்டும்.