அடையாளம் இழக்கும் வரலாற்று சின்னம் மீட்டெடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பல்லடம்: 'பல்லடம் கடை வீதியில் உள்ள கோடை ஈஸ்வரன் கோவிலை புனரமைத்து பாதுகாக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பல்லடம் வட்டார பகுதியில், நுாறாண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள், வரலாற்று சிற்பங்கள், கல்வெட்டுக்கள் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன. இங்குள்ள பல கோவில்கள் வரலாற்றுப் பின்னணியே தெரியாத அளவுக்கு பழமை வாய்ந்தவையாக உள்ளன.

அந்த வகையில், பல்லடம் கடைவீதியில் உள்ள சிறப்பு மிக்க கோட்டை விநாயகர் கோவில், பராமரிப்பின்றி கிடப்பது, பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

பழமையான இக்கோவில், சிவலிங்கம், நந்தி ஆகியவை பராமரித்து பாதுகாக்கப்பட வேண்டியவை. பராமரிப்பின்றி காணப்படும் கோவிலின் நிலையை காண வேதனையாக உள்ளது.

நம் பகுதியில் இப்படி ஒரு சிவன் கோவில் இருப்பது நமக்கு பெருமையானது. ஆன்மீகப் பெரியோர்கள், பக்தர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் இணைந்து கோவிலை பராமரிக்கவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

''பல்லடம் கடை வீதியில் உள்ள இக்கோவில் கோட்டை விநாயகர் கோவில் என்பதுதான் பலருக்கும் தெரியும். ஆனால், முந்தைய காலத்தில் இது கோட்டை ஈஸ்வரன் கோவிலாக இருந்தது பலருக்கும் தெரியாது'' என்கிறார், கோவில் குறித்து ஆய்வு மேற்கொண்ட பல்லடம் வரலாற்று ஆர்வலர் குழு நிர்வாகி மகிழ்வேல் பாண்டியன்.

மேலும் அவர் கூறியதாவது :

இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் மற்றும் நந்தி ஆகியவை, ஏறத்தாழ, 900 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்கையில், முன்பு இப்பகுதியில் வாழ்ந்து வந்த பூசாரி ஒருவர், மண்ணில் புதைந்து கிடந்த சிவலிங்கத்தை மீட்டு பிரதிஷ்டை செய்தார்.

பொதுமக்கள் பலர் ஆட்சேபம் தெரிவித்தும், பூசாரி, லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்ததாக செவி வழி செய்திகள் கூறுகின்றன. எந்தக் கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு இக்கோவிலில் உள்ளது.

பெரும்பாலான கோவில்களில், லிங்கம், நாகர் சிற்பங்கள் தனித்தனியாகத்தான் இருக்கும். ஆனால், இக்கோவிலில், ஒரே பாறையில் நாகர், லிங்கம் உட்பட ஒருவர் பூஜை செய்து வழிபடும்படியான புடைப்பு சிற்பம் உள்ளது.

இதேபோல், 5 அடி உயர கல்லிலேயே சூலாயுதமும் செதுக்கி உள்ளனர். இங்குள்ள லிங்கம், 3 அடி பூமிக்கு கீழாகவும், 3 அடி பூமிக்கு மேல் உயரத்துடனும் உள்ளது. கோவில் குறித்த வரலாறுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

இவ்வாறு, பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவிலாக இருந்தது. பின்நாளில், விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின், கோட்டை விநாயகர் கோவிலாக அழைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement