மதுரை மாநாடு வெற்றி பெறும்!
திருப்பூர்: மதுரையில் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெறும்' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர், ஹிந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து திசை திருப்பும் வகையில் பேசி வருகிறார். ஹிந்து முன்னணி, அரசியல் கட்சி இல்லை; எந்த தேர்தலிலும் போட்டியிடாது. இது ஒரு ஆன்மிக மாநாடு. தி.மு.க., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வருக்கும் அழைப்பிதழ் வழங்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. மாநாட்டுக் குழு சார்பாக அரசியல் தலைவர்கள், ஆன்மிகப் பெரியோர்கள், சமுதாயத் தலைவர்கள், ஊடக அதிபர்கள், காவடி, பால்குட, பாதயாத்திரை முருக பக்தர் குழு உட்பட ஒரு கோடி குடும்பத்தினருக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மதுரையில், 22ல் நடக்கும் மாநாடு முழுக்க ஆன்மிக, ஹிந்து உணர்வு மாநாடு. அரசியல் வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்வர். ஐந்து லட்சம் பேருக்கு மேல், பங்கேற்கும் ஆன்மிக சாதனை மாநாடாக இது அமையும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.