வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வாழ வைக்கும் புதுச்சேரி .
இருபதாம் நுாற்றாண்டில் ஆரம்பத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஆங்கிலேயேர்களின் பிடியில் இருந்த சூழ்நிலையில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகே, சந்திரநாகூர் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது.
ஆங்கிலேயேர்கள் கெடுபிடி அதிகரித்ததால் மகாகவி பாரதியார், வ.உ.சு., ஐயர், ஸ்ரீநிவாச ஆச்சாரியார், மண்டையம் திருமலை ஆச்சாரியார், வளையாபதி அடிகளார், அரவிந்தர், சுப்ரமணிய சிவா, வ.உ.சி., வாஞ்சிநாதன், மாடசாமி என தீவிர தேசபக்தர்களும் எழுத்தாளர்களும் புதுச்சேரிக்கு வந்து தங்கி, தங்களது தாய்நாட்டு விடுதலைக்கான தன்னலமற்ற பணிகளை தீவிரமாகவே தொடர்ந்தனர்.
இந்த அடைக்கலம் கொடுத்த பெருமை இருபதாம் நுாற்றாண்டில் மட்டும் கிடைத்தது அல்ல. புதுச்சேரியின் வரலாற்றின் பக்கங்களை சற்றே பின்னோக்கி புரட்டி சென்றால் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் நம்பி வந்தவர்களையும் அரவணைத்து அடைக்கலம் கொடுத்து அவர்களின் உயிர்களை காப்பாற்றிய உணர்ச்சிமய சூழலை பார்க்க முடிகிறது.
மராட்டியர்கள் போர்க்குணம் மிக்கவர்கள். 1740ல் தென்னாட்டினை குறி வைத்த மராட்டியர்கள் 50,000 குதிரை வீரர்களுடன் ஆற்காட்டு பகுதிக்குள் பாய்ந்தனர்.
அவர்களை சமாளிக்க போதுமான படை பலம் ஆற்காடு நாவப்பிடம் இல்லை. இதனால் கலகலத்து போயினர். அடைக்கலம் கேட்டு புதுச்சேரி கவர்னருக்கு கடிதங்கள், ஓலைகள் குவிந்தன.
குறிப்பாக செஞ்சி, வாலி கொண்டாபுரம், வந்தவாசி வட்டங்களில் இருந்து ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்டும் கோட்டை கில்லேதாரர்கள், பெரிய மனிதர்கள், எங்கள் பெண்கள், குழந்தைகளை அனுப்பி வைக்கிறோம். வீடு தந்து மற்ற வசதிகளை செய்து தர வேண்டும் என, கடுதாசியில் எழுதி அனுப்பினர்.
அதன்படி சாரை சாரையாக புதுச்சேரி நோக்கி அடைக்கலம் தேடி வந்தனர். சாதாரண மக்களோடு, ஆற்காடு நவாபின் குடும்பத்தினரும் வந்தனர்.
நவாபு தோஸ்தலிகானின் மனைவி வந்தவாசி கோட்டையில் இருந்து வந்து அடைக்கலம் புகுந்தார். அவருடன் 100 வீரர்களை கொண்ட ராணுவம், 12 ஒட்டகங்கள், 30 குதிரைகள், நான்கு பல்லக்குகள், ஐந்து யானைகள் உள்ளிட்ட பரிவாரங்களும் வந்து சேர்ந்தன.
நவாபின் மனைவி என்பதால் பிரெஞ்சு ஆட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பீரங்கி குண்டு முழங்க வரவேற்பு கொடுத்து கவர்னரின் தோட்டத்திற்கு அழைத்து வந்தனர்.
வேலுார் கோட்டையில் இருந்து சப்தரகாலிகான் சாயபுபின் மனைவி, அவர் உடன் பிறந்த மூவர், இரண்டு வயது ஆண் குழந்தையுடன் வந்தனர். அவர்களுடன் நவாபு தோஸ்தலிகானின் உடன் பிறந்தாள், முகமது அலி சாயபுவின் குமாரனும் வந்தனர்.
இதுதவிர 300 குதிரைகள், 10 யானை, 500 ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். இவர்கள் முத்தியாப்பிள்ளை வீட்டுமேல் மாடியில் தங்கி இருக்க இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அகதிகளாக நொந்துபோன நிலையில் புதுச்சேரிக்கு வந்தபோதிலும் சம்பிரதாய வரவேற்பு, மரியாதை சிறிதளவேனும் குறையவில்லை. அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதே வரவேற்பு அகதிகளாக வந்தவர்களுக்கும் பிரெஞ்சியர்கள் கொடுத்தனர்.
அதுவும் பெண்கள் மட்டுமே வந்தபோதும் கூட மேளம், கொம்பு, தழுக்கு, புல்லாங்குழல் சகிதமாக பீரங்கி போட்டு வரவேற்று அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
போர் குணம் மிக்க மராட்டியர்களின் பகையை தேடிக்கொள்ள நேரிடும் என்றும் தெரிந்து கூட யாருக்கும் அஞ்சாமல் பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
இருப்பினும் துக்கமான செய்தியே கிடைத்து. போரில் மராட்டியர்களின் கையே ஓங்க, நவாபு தோஸ்தலிகான் போரிட்டு மாண்டான்.
அந்த அடைக்கலம் கொடுத்த பெருமை இன்றைக்கும் தொடருகிறது. வெளியூரில் இருந்து வந்தவர்களையெல்லாம் அரவணைத்து அடைக்கலம் கொடுத்து புதுச்சேரி வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது.