இ.ஆட்டோ ஓட்ட தயாராகும் கராத்தே பயிற்சி பெற்ற பெண்கள்; புதுச்சேரி நகராட்சி புது முயற்சி

புதுச்சேரியில் கராத்தே பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவி குழு பெண்கள் இ. ஆட்டோ ஓட்ட தயாராகி வருகின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புதுச்சேரி நகராட்சி சார்பில் 38 பேட்டரி ஆட்டோக்கள் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதில் முதல் கட்டமாக இரண்டு பேட்டரி ஆட்டோக்கள் கடற்கரை சாலைக்கு வரும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை ஏற்றி சென்று கடற்கரைப் பகுதியை காண்பிக்கும் விதமாக தலைமை செயலகம் துவங்கி, டுப்ளெக்ஸ் சிலை இயக்கப்பட உள்ளது.

மற்ற ஆட்டோக்கள் புதுச்சேரி முழுதும் வழக்கம்போல் இயக்கப்பட உள்ளது. இது மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஆரோவில் வரை இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆட்டோவில் பயணிப்பவர்கள் சவாரிக்கான கட்டணத்தை எளிதாக செலுத்தும் வகையில் (ஆப்) செயலி ஒன்றையும் புதுச்சேரி நகராட்சி தயார் செய்துள்ளது. மேலும் 38 ஆட்டோக்களை ஓட்டுவதற்கு 42 பெண்களை புதுச்சேரியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவில் இருந்து நகராட்சி தேர்வு செய்து ஆட்டோ ஓட்ட பயிற்சி அளித்து வருகிறது.

இவர்கள் வாகனம் ஓட்டும்போது ஏற்படும் பிரச்னைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த பெண் டிரைவர்களுக்கு ஒரு வார காலம் கராத்தே பயிற்சி நகராட்சி சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இ.பேட்டரி ஆட்டோக்கள் சார்ஜ் செய்வதற்கு புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இந்த இ.ஆட்டோக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது சுற்றுச்சூழல் மாசும், ஆட்டோ கட்டணங்களும் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.

மேலும் புதுச்சேரியில் இ.பஸ் மற்றும் இ. ஆட்டோக்கள், ஸ்மார்ட் பஸ் ஸ்டாப் ஆகியவை விரைவில் ஒரே நேரத்தில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

Advertisement