காவிரி ஆற்றில் துாய்மை பணி 3.5 டன் குப்பை அகற்றம்

தஞ்சாவூர் : மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், திருவையாறு நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்பினர், கல்லுாரி மாணவ,மாணவிகள் என நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள், காவிரி ஆற்றில் கிடந்த மக்கா குப்பைகளான பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பொருட்களை அகற்றினர். காவிரி ஆற்று மணலில் இருந்த 3.5 டன் குப்பை அகற்றப்பட்டது.
இது குறித்து தன்னார்வ அமைப்பினர் கூறியதாவது:
ஆறு என்பது மனிதனுக்கு மட்டும்மல்ல அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. அரசு விவசாயிகளுக்காக நீர்வரத்து வாய்க்கால்களை துார்வார முக்கியத்துவம் அளிக்கும் சூழலில், ஆறுகளை பேணி காப்பதிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொதுமக்களும் ஆற்றினை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். மணலில் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபான கண்ணாடி துண்டுகள் நீர்வாழ் உயரிணங்களுக்கும், கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் மிகப்பெரிய ஆபத்துகளை விளைவிக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். திருவையாறில் ஒரு இடத்தில் மட்டும் 3.5 டன் குப்பைகள் என்றால், தமிழக ஆறுகளில் எவ்வளவு பிளாஸ்டி குப்பைகள் இருக்கும் என்பதை எண்ணி பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது. இதற்கு மக்களிடம் விழிப்புணர்வு, அரசிடம் முறையான சட்டம் மட்டுமே தீர்வாக அமையும்.
இவ்வாறு தெரிவித்தனர்.