பஸ்களில் திருடிய 4 பெண்கள் கைது

ஹாசன்: பஸ்களில் அதிக கூட்ட நெரிசல் இருக்கும்போது, தங்கச்செயின், தாலிச்செயின், பர்ஸ் உள்ளிட்ட பொருட்களை பயணியர் போன்று பயணம் செய்து திருடி வந்த நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா பஸ் நிலையத்தில், பெண் ஒருவரின் தங்க செயின் திருடுபோனது.

இது தொடர்பாக, ஹொளேநரசிபுரா நகர போலீசார், பல கோணங்களில் விசாரணை நடத்தி, சசி, 35, மாதவி, 40, அகிலா, 30, வித்யா.29, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இவர்களிடம 6.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன.

கைதான இவர்கள், ஆந்திராவின் சித்துாரை சேர்ந்தவர்கள். இவர்கள் அதிக கூட்டமாக இருக்கும் அரசு பஸ்களில் ஏறுவர்.

கூட்டத்தை பயன்படுத்தி பெண்களின் தாலிச்செயின், தங்கச்செயினை திருடிக் கொண்டு, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி தப்பிவிடுவர்.

இவர்கள் ஹாசன் மட்டுமின்றி, பெங்களூரு உட்பட, பல்வேறு மாவட்டங்களில் பஸ்களில் திருடியுள்ளனர். இவர்கள் நால்வரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள்.

சசி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மற்ற மூவரும் கூலி வேலை செய்கின்றனர். அவ்வப்போது பஸ்களில் வெவ்வேறு நகரங்களுக்கு சென்று திருடுவர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement