திருத்தணியில் 105 திருமணங்கள் போக்குவரத்தால் கடும் நெரிசல்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால் வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.
நேற்று மலைக்கோவிலில் மட்டும், 40 திருமணங்களும், 65 தனியார் திருமண மண்டபங்களில் 65 திருமணமும் நடந்தது. பெரும்பாலானோர் பேருந்து, கார், வேன், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்ததால் திருத்தணி ம.பொ.சி.சாலை மற்றும் அரக்கோணம் ஆகிய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக திருத்தணி- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், ஒரு கி.மீ., துாரம் வாகனங்கள் நெரிசலில் சிக்கி, நீண்ட வரிசையில் நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் மக்கள் கடும் சிரமப்பட்டனர். அதே போல் மலைப்பாதையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலீசார் அரக்கோணம் சாலை மற்றும் மலைப்பாதைக்கு வந்து, போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.