சிறுமி படுகொலை: உடலை சூட்கேசில் பதுக்கிய கொடூரம்

புதுடில்லி: டில்லியில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த நபர், உடலை சூட்கேசில் அடைத்து வைத்துவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில் உள்ள தயாள்பூரின் நேரு விஹார் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, நேற்று முன்தினம் இரவு அருகேயுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

இரண்டு மணி நேரத்துக்கு மேலாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் அவரை தேடி சென்றனர். அப்போது சிறுமி உடனே திரும்பி விட்டதாக உறவினர் தெரிவித்தார்.

இதையடுத்து அருகே உள்ள மற்றொரு வீட்டுக்கு சிறுமி சென்றதாக சிலர் தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்தபோது வீடு வெளிப்புறமாக பூட்டி கிடந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது சூட்கேசில் நிர்வாண கோலத்தில் ரத்தக்கறையுடன் சிறுமி மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக பெற்றோர் சிறுமியை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்து தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement