திருவொற்றியூர், மணலியில் தொடரும் மின்தடையால் அவதி
திருவொற்றியூர்:திருவொற்றியூர், மணலி, எண்ணுார், கத்திவாக்கம், மணலிபுதுநகர் பகுதிகளில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சமீபமாக வெயில் தாக்கம் அதிகரித்திருப்பதால், இரவு மற்றும் பகல் வேளைகளில், 'ஏசி' பயன்பாடு அதிகரித்துள்ளது.
கூடுதல் மின் நுகர்வை சமாளிக்கும் பொருட்டு, மின்மாற்றி வசதிகள் இல்லாததால், பெரும்பாலான இடங்களில், பழுது மற்றும் மின் ஒயர் பற்றி எரிந்து, மின் தடை ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
அதன்படி, மணலி, திருவேங்கடம் தெரு, எட்டியப்பன் தெரு, ராதாகிருஷ்ணன் தெருக்களில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு தடைப்பட்ட மின்சாரம், நேற்று மதியம் வரை சீராகவில்லை.
மின்மாற்றி பழுது ஏற்பட்டுள்ளதால், நிலைமை சீரடைய தாமதமாகும் என, மின் வாரிய அதிகாரிகள் கூறுவதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதேபோல, திருவொற்றியூர் கணக்கர் தெருவில், நேற்று முன்தினம் இரவு, இரண்டு மணி நேரமாக மின் தடை ஏற்பட்டது.
தவிர, திருவொற்றியூரின், அஜாக்ஸ் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை மின்தடை ஏற்பட்டது. அதே போல், எண்ணுார், மணலிபுதுநகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், அவ்வப்போது மின்தடை ஏற்படுகின்றன. இதற்கு, போதிய மின் பகிர்மான கட்டமைப்பு வசதி கிடையாது.
கூடுதல் மின்மாற்றிகள் அமைக்கப்பட வேண்டும். அதேபோல ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. ஐந்து உதவி பொறியாளர் பணியிடங்கள் கொண்ட மணலியில், இருவர் மட்டுமே பணியில் உள்ளனர். ஊழியர்கள் சொற்ப அளவிலேயே உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, இப்பிரச்னைகளை களைந்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.