சூணாம்பேடு ஊராட்சிக்கு ரூ.22 லட்சத்தில் நுாலக கட்டடம்

சூணாம்பேடு:சூணாம்பேடில், 22 லட்சம் மதிப்பில் நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு பஜார் பகுதியில், மீன் மார்கெட் அருகே கிளை நுாலகம் இயங்கி வருகிறது.
நுாலகத்தில் 100க்கும் மேற்பட்ட வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
மேலும், தினமும் பள்ளி மாணவர்கள், பட்டதாரிகள், பொதுமக்கள் என, ஏராளமானோர் நுாலகத்தை பயன்படுத்துகின்றனர்.
நுாலக கட்டடம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்தது.
மழைக்காலங்களில் கட்டடத்தின் மேல் பகுதியில் உள்ள விரிசல்கள் வழியாக மழைநீர் கசிந்து, புத்தகங்கள் வீணாகின.
மேலும் புத்தகங்களை அடுக்கி வைக்க போதிய வசதி இல்லாததால், நுாலகத்திற்கு வரும் புதிய நுால்களை அடுக்கி வைக்க இடமின்றி, மூட்டை கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், வாசகர்கள் விரும்பும் புத்தகங்களை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருந்தது.
எனவே, நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு நிதியின் கீழ், 22 லட்சம் ரூபாயில், பழைய நுாலகத்திற்கு அருகே புதிய கட்டடம் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.
இந்த நுாலக கட்டடம் விரைவில் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.