சூடாமணியுடன் 400 ஆண்டு ஆஞ்சநேயர் கோவில்

பெங்களூரு, பசவனகுடி பகுதியில் அமைந்து உள்ளது ஸ்ரீ காரஞ்சி ஆஞ்சநேயசுவாமி கோவில். இந்த கோவில் 17ம் நுாற்றாண்டை சேர்ந்தது. 400 ஆண்டுகள் பழமையானது. இது கெம்பேகவுடாவால் புதுப்பிக்கப்பட்டது.

இதுகுறித்த கல்வெட்டுகள் எதுவும் கோவில் வளாகத்தில் இல்லை. இந்த கோவில் பெங்களூரில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த கோவிலின் மூலவராக ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமி தன் கால்களை முன்னோக்கியும், இரு கைகளையும் மேலே தூக்கியவாறு உள்ளார். தன் கைகளில் சூடாமணியை ஏந்தி கொண்டு உள்ளார். ஆஞ்சநேயசுவாமியின் சிலை 18 அடி அகலம் கொண்டது. இந்த விக்ரஹத்தை பார்த்தாலே, நமக்கு உற்சாகம் தொற்றி விடும். மறுபுறம் ராமர், சீதா பிராட்டி, லட்சுமணனுடன் காட்சி அளிக்கிறார்.

சூடாமணி



சீதாதேவியை பார்க்க இலங்கைக்கு சென்ற ஆஞ்சநேயர், சீதாவிடமிருந்து சூடாமணியை வாங்கி வந்தார். அதை நினைவு கூறும் வகையில், ஆஞ்சநேயசுவாமியின் கையில் சூடாமணி உள்ளதாக வரலாறு கூறுகிறது.

இந்த கோவிலில், ராமர், ஆஞ்சநேயரின் உருவ சிலைகள் சிற்பங்களாக உள்ளன. ஆஞ்சநேயர் இலங்கைக்கு செல்லும் காட்சிகள் போன்றவை ஓவியங்களாகவும் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள், ஆஞ்சநேயரிடம் தங்களின் கோரிக்கைகளை வேண்டுதல்களாக வைக்கின்றனர்.

சுவாமிக்கு பஞ்சாமிர்தம், வெண்ணெய், நெய் அபிஷேகம் ஆகியவை நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஹனுமன் ஜெயந்தி, லட்சார்ச்சனை, ராமநவமி ஆகிய நாட்களில் பிரம்மாண்டமாக பூஜை நடக்கும்.

இசை கச்சேரி



குறிப்பாக, ராமநவமி அன்று தெய்வீக இசை கச்சேரி நடக்கும். இதை பார்க்கவும், கேட்கவும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர். தங்கள் வேண்டுதல்களை முன்னிட்டு அபிஷேகங்கள், விசேஷ பூஜைகளை மேற்கொள்வர். சிறப்பு பூ மாலைகள் அணிவித்து வழிபடுகின்றனர்.


இக்கோவில் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும்

- நமது நிருபர் -.

Advertisement