கைலாஷ் மானசரோவர் யாத்திரை: 39 யாத்ரீகர்களைக் கொண்ட முதல் குழு புறப்பட்டது

காசியாபாத்: 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக, 39 யாத்ரீகர்களைக் கொண்ட முதல் குழு, இன்று காசியாபாத்திலிருந்து புறப்பட்டது.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது, கயிலை மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு செல்லும் புனிதப் பயணம் ஆகும்.
இந்த யாத்திரை பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். மேலும் இது லிபுலேக் கணவாய் (உத்தரகாண்ட்) அல்லது நாது லா (சிக்கிம்) வழியாக மேற்கொள்ளப்படுகிறது.
உ.பி., மாநிலம் இந்திராபுரத்தில் உள்ள கைலாசா மானசரோவர் பவனில் இன்று கொடியேற்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சர் ஜெய்வீர் சிங் யாத்திரையை துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கேபினட் அமைச்சர் சுனில் சர்மா, காசியாபாத் எம்.பி., அதுல் கார்க், முதன்மை செயலாளர் (மத விவகாரங்கள் மற்றும் கலாச்சாரம்) முகேஷ் மேஷ்ராம் மற்றும் மாவட்ட நீதிபதி தீபக் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து சுற்றுலா அமைச்சர் ஜெய்வீர் சிங் கூறியதாவது:
உ.பி.,யில் இருந்து யாத்திரை மீண்டும் தொடங்குவது ஒரு வரலாற்று தருணம். இது மத சுற்றுலாவை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் சனாதன கலாசாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக விளங்குகிறது.
இவ்வாறு ஜெய்வீர் சிங் கூறினார்.
இந்தியா- சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக இந்த யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
