புதுச்சேரி பல்கலையில் அனைத்து படிப்புகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு துணை ஜனாதிபதியிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துணை ஜனாதிபதியிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தினார்.

புதுச்சேரி ராஜ்நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதன் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு விருந்தளித்தார். அப்போது துணை ஜனாதிபதியை சந்தித்த முதல்வர் ரங்கசாமி அளித்த மனு:

மற்ற மாநில மாணவர்களுடன் ஒப்பிடுகையில், புதுச்சேரி மாணவர்களுக்குச் சிறப்புப் கல்விப் படிப்புகளைத் தொடர வாய்ப்பு இல்லை. புதுச்சேரியில் மத்தியப் பல்கலைக்கழகம் வந்தவுடன், புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை எழுந்தது. 1990களில் இத்தகைய கோரிக்கை எழுந்தபோது, அப்போதைய துணை வேந்தர் ஞானம், கல்விக் குழு மற்றும் செயற்குழுவுடன் கலந்தாலோசித்தார். பிறகு, 1997ல் பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டை நீட்டித்தார். அதன்படி, ஆரம்பத்தில் 8 படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பின், அது 18 ஆக அதிகரித்தது. இருப்பினும், காலப்போக்கில் பல்கலைக்கழகத்தில் வேலை சார்ந்த புதுமையான படிப்புகள் தொடங்கப்பட்டபோது, இடஒதுக்கீடு நீட்டிக்கப்படவில்லை. புதுச்சேரி இளைஞர்களின் மனதில் அதிருப்தியை விதைத்துள்ளது.

மக்களின் உணர்வையும் நியாயப்படுத்தி, புதுச்சேரி அரசு சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிது. இது தொடர்பாக ஒரு 3 பேர் கொண்ட குழு, விரிவான விவாதங்களுக்குப் பிறகு, அனைத்துப் படிப்புகளிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டைப் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரை 2013-14ல் கல்விக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. செயற்குழுவாலும் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இடஒதுக்கீடு வழங்குவதற்கான எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை.

மத்திய ஆதரவு பெற்ற நிறுவனங்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு தருவது ஒன்றும் ஒரு புதிய நிகழ்வு அல்ல. காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம், புதுச்சேரி, யூனியன் பிரதேசங்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கியுள்ளது. அதேபோல், மற்றொரு மதிப்புமிக்க மருத்துவ நிறுவனமான ஜிப்மர், 1964ல் துவங்கப்பட்டதிலிருந்து 25 சதவீத இடங்களை ஒதுக்கி வருகிறது. ஆனால் புதுச்சேரி பல்கலைக்கழகம் 64 படிப்புகளில் 18 படிப்புகளுக்கு மட்டுமே இடஒதுக்கீட்டை நீட்டித்துள்ளது.

எனவே புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தற்போது வழங்கப்படும் அனைத்துப் படிப்புகளிலும் மற்றும் வரவிருக்கும் படிப்புகளிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டை கூடிய விரைவில் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement