தண்டவாளத்தில் மரம் விழுந்து தீ; குமரி - புனலுார் ரயில் தப்பியது

திருவனந்தபுரம்; கேரள மாநிலம், கொல்லம் அருகே தண்டவாளத்தில், மின் கம்பியில் மரம் முறிந்து விழுந்து தீப்பிடித்தது. அப்போது, 100 மீட்டர் இடைவெளியில் கன்னியாகுமரியில் இருந்து புனலுார் சென்ற ரயில் நிறுத்தப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக தப்பியது.

கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு சொர்னுார் - திருவனந்தபுரம் வேணாடு எக்ஸ்பிரஸ், கொல்லம் அருகே சென்று கொண்டிருந்தது. இந்த ரயில், கொல்லம் கப்பலண்டி முக்கு ரயில்வே கேட்டை கடந்து சென்றது.

சிறிது நேரத்தில் கன்னியாகுமரி -- புனலுார் பயணியர் ரயில் வருவது குறித்த தகவல் கிடைத்ததும், கப்பலண்டி முக்கு கேட்டில் பணியிலிருந்த கேட் கீப்பர்கள் வினிதா, மகேஸ்வரி, ரயில்வே கேட்டை மூடினர்.

இந்நேரத்தில் திடீரென ஒரு பெரிய மரம் முறிந்து தண்டவாளத்தில் உள்ள மின்கம்பத்தில் விழுந்தது. சிறிது நேரத்தில் அந்த மரம் தீப்பிடித்து எரிய துவங்கியது. இதை கவனித்த கேட் கீப்பர்கள், கொல்லம் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்து, கன்னியாகுமரி -- புனலுார் ரயிலை நிறுத்துமாறு கூறினர்.

கொல்லம் ரயில் நிலைய மேலாளர், கன்னியாகுமரி - புனலுார் ரயில் இன்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுத்தார். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனாலும், மரம் எரிந்து கொண்டிருந்த இடத்திற்கு 100 மீட்டருக்கு முன்னர் தான் ரயிலை நிறுத்த முடிந்தது.

தக்க நேரத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த பின், மின்கம்பிகளை சீரமைக்கும் பணி துவங்கி, ரயில் போக்குவரத்து சீரானது.

Advertisement