ஹஜ் பயணியர் விமானத்தில் தீ

லக்னோ: சவுதி அரேபியாவில் இருந்து ஹஜ் பயணியரை ஏற்றி வந்த விமானம், லக்னோவில் தரையிறங்கியபோது சக்கரத்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நம் நாட்டில் இருந்து, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் ஹஜ்ஜுக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட 250 பேர், 'சவுதி ஏர்லைன்ஸ்' விமானம் வாயிலாக நேற்று முன்தினம் புறப்பட்டனர்.

ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு விமானம் புறப்பட்டது. நேற்று காலை 6:30 மணிக்கு உ.பி.,யின் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

தரையிறங்கிய சில நிமிடங்களில் விமானத்தின் இடதுபுற சக்கரத்திலிருந்து புகை மற்றும் தீப்பொறி கிளம்பி எரியத் துவங்கியது.

விமானி உடனடியாக, விமானப் போக்கு வரத்துக் கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

விமானம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, 'டாக்ஸிவே'க்கு மாற்றப்பட்டது. அங்கு பயணியரும், பணியாளர்களும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.

விமான நிலைய அவசரகால மீட்புக்குழு விரைவாக சென்று, 20 நிமிடங்களுக்குள் தீயை அணைத்தது. 'ஹைட்ராலிக்' கசிவால் விமானத்தின் சக்கர அமைப்பில், அதீத வெப்பம் ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement