இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரியில் நவீன உயிர் வேதியியல் ஆய்வகம் திறப்பு

புதுச்சேரி : கதிர்காமம், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.45 கோடியில் நவீன மயமாக்கப்பட்ட உயிர் வேதியியல் துறை ஆய்வகத்தினை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி உயிர் வேதியியல் துறை ஆய்வகத்தில் ரூ 1.16 கோடியில் முற்றிலும் தானியங்கி வசதி கொண்ட ஒருங்கிணைந்த ஆய்வு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரமானது இந்தியாவிலேயே முதன் முறையாக மருத்துவக் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் வழக்கமான பரிசோதனைகளான சர்க்கரை நோய், சிறுநீரகம், கல்லீரல் பரிசோதனைகளுடன், ரத்தத்திலுள்ள உப்பு சத்துக்கள், ஹார்மோன்கள், குழந்தையின்மை மற்றும் புற்று நோய்க்கான காரணிகளை மிக துல்லியமாக ஆய்வு செய்யும் வசதி கொண்டது.

மேலும் ஆய்வகத்தில் ரூ. 29.2 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள 'எச்பி ஏ1சி' இயந்திரமானது, மூன்று மாத சர்க்கரை அளவை பரிசோதிப்பதுடன், மரபணு சார்ந்த நோய்களையும் கண்டறியும் திறன் கொண்டது.

தற்போது நவீன மயமாக்கப்பட்ட இந்த ஆய்வகத்தில் ஒரு மணி நேரத்தில் 300 நோயாளிகளின் பரிசோதனை மாதிரியில் 2000 பரிசோதனை முடிவுகளை கண்டறியும் வகையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகம் திறப்பு விழா நேற்று நடந்தது விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கல்லுாரியின் இயக்குனர் உதய சங்கர், முதல்வர் ராமச்சந்திர பட், மருத்துவ கண்காணிப்பாளர் சைமன், நிர்வாக அதிகாரி முத்துலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை உயிர் வேதியில் துறை தலைவர் விநாயகமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement