சாலையில் துளையிட்டு கட்சி கொடி லாஸ்பேட்டையில் மக்கள் கடும் அவதி

புதுச்சேரி : என்.ஆர். காங்., பிரமுகர் பிறந்த நாள் விழாவிற்காக, லாஸ்பேட்டையில் பிரதான சாலையில் துளையிட்டு கட்சி கொடிகளை நட்டது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

லாஸ்பேட்டை என்.ஆர். காங்., பிரமுகர் நந்தா ஸ்ரீதரன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி, பிறந்த நாள் கொண்டாடுவது நல்ல விஷயம் தான். ஆனால், பிறந்த நாளுக்காக பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக என்.ஆர். காங்., கட்சி கொடிகளை சாலையோரத்தில் நட்டது, பல இடங்களில் பேனர்கள் வைத்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

லாஸ்பேட்டை அய்யனார் கோவிலில் ஆரம்பித்து, லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள அவரது வீடு வரை சாலையின் இரண்டு பக்கத்திலும் துளை போட்டு என்.ஆர். காங்., கட்சி கொடியை ஆதரவாளர்கள் நட்டுள்ளனர். குறிப்பாக, மடுவுபேட்டை சிக்னல் முதல், லாஸ்பேட்டை மெயின் ரோடு நுாலகம் வரையில் சிமெண்ட் சாலையில் 'டிரில்லிங் மெஷின்' மூலமாக துளையிட்டு வரிசையாக கொடி நட்டுள்ளனர்.

இதுபோல சாலையில் துளையிட்டு கொடி கம்பங்கள் நட்டால், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி சாலைகள் விரைவில் சேதமடையும் அபாயம் எழுந்துள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலைகள் விரைவில் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி விடும்.

கொடி கம்பங்கள் நடுவதற்கும், பேனர்கள் வைப்பதற்கும் பொதுப்பணித் துறை, நகராட்சியிடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? அனுமதி பெறாமல் வைத்திருந்தால் அதிகாரிகள் பாரபட்சம் இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், ஆளுங்கட்சி, எதிர்கட்சி என வித்தியாசம் பார்க்கக் கூடாது.

ஜிப்மரில் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை ஜனாதிபதி நேற்று சென்றபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக, இ.சி.ஆரில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், லாஸ்பேட்டை மெயின் ரோடு வழியாக புகுந்து செல்ல முயன்ற வாகன ஓட்டிகள், சாலையோரத்தில் நடப்பட்டு இருந்த கட்சி கொடிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர். இதை போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

புதுச்சேரியில் சாலையில் துளையிட்டு கட்சி கொடிகள் வைப்பதற்கு நிரந்தரமாக அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும். அனுமதி இல்லாமல் வைப்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொருவராக கட்சி கொடியை கொண்டு வந்து சகட்டுமேனிக்கு நட்டு, சாலையை கொத்து பரோட்டோ போட்டு விடுவார்கள்.

Advertisement