ஏழை ஹிந்துக்கள் 3 குழந்தை பெற்றால் கல்வி செலவை ஏற்போம்: தொகாடியா

ஹூப்பள்ளி: ''ஒவ்வொரு ஹிந்து பெற்றோரும், மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தால், அவர்களை கவுரவிப்போம்.

''ஏழை ஹிந்துக்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தால், அவர்களின் கல்வி செலவை நாங்களே ஏற்போம். 1 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி தொகை வழங்க எங்களிடம் நிதி வசதி உள்ளது,'' என, சர்வதேச ஹிந்து பரிஷத் நிறுவன தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்தார்.

ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ராமர் கோவில் கட்டுவதே எங்கள் நோக்கமாக இருந்தது. அப்பணி இப்போது நிறைவடைந்து விட்டது.

இன்று கோடிக்கணக்கான ஹிந்துக்களுக்கு உதவும் பணியை துவங்கி உள்ளோம். ஹிந்து ஹெல்ப் லைன் துவங்கி உள்ளோம்.

ஹிந்துக்கள் பசியால் வாடக்கூடாது. அதற்காக, ஏழை ஹிந்துக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குகிறோம். ஹிந்துக்களுக்கு இலவச சுகாதார பராமரிப்பை வழங்குகிறோம்.

ஹிந்து கட்சி துவங்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்தியா ஒரு ஹிந்து நாடு. அதை ஹிந்து நாடாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. 1947 முதல் இந்தியா முன்னேறி வருகிறது.

பல துறைகளில் பெரும் சாதனைகளை செய்துள்ளது. இந்தியா வளர்ந்து சிறந்த நாடாக மாறி உள்ளது.

ராமர் கோவிலுக்காக செய்த பிரசாரம் வெற்றி பெற்றது. ஹிந்துக்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்தால் நாங்கள் போராடுவோம். நாட்டின் பல பகுதிகளில் ஹிந்துக்கள் தாக்கப்படுகின்றனர். எனவே, ஹிந்துக்களின் பாதுகாப்புக்காக நாங்கள் போராடுவோம்.

'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் பாகிஸ்தானை தாக்கியது வரவேற்கத்தக்கது. இன்னும் அதிகளவில் தாக்கி இருந்தால், நம் மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பர்.

'நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. ஹிந்துக்களின் பிறப்பு விகிதம் 1.7 ஆக உள்ளது. இது நாட்டுக்கு நல்ல வளர்ச்சி அல்ல.

'மூன்று குழந்தைகள் உண்மையான ஹிந்து' என்பதே எங்களின் கோஷம். ஒவ்வொரு ஹிந்து பெற்றோரும், மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தால், அவர்களை கவுரவிப்போம்.

ஏழை ஹிந்துக்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தால், அவர்களின் கல்வி செலவை நாங்களே ஏற்போம். 1 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி தொகை வழங்க எங்களிடம் நிதி வசதி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement