'தி.மு.க.,வை பற்றி கேள்விகளை கேட்கவா குரூப் - 1 தேர்வு'

வேலுார், ''தி.மு.க.,வை பற்றி கேள்வி கேட்கவா, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1' தேர்வு நடத்தப்படுகிறது,'' என, வேலுாரில், பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.


வேலுாரில் நேற்று நடந்த ஒருங்கிணைந்த, பா.ம.க., மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழக முதல்வருக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. முதல்வரை, 'ரோடு ஷோ'விற்கு கூட்டி செல்வார்கள். அங்கு நிற்க வைப்பார்கள், கையை அசைக்க சொல்வார்கள், அதேபோன்ற, அவரது கட்சியினர் முதல்வரை பார்த்து கையை அசைப்பார்கள். பின், தி.மு.க.,வை சேர்ந்த, பெண்களிடம், முதல்வரிடம் என்ன சொல்ல வேண்டும் எனக்கூறி அழைத்து செல்வார்கள், அவர்களிடம் முதல்வர், 'நல்லா இருக்கிறீங்களா' என கேட்பார். அதற்கு பெண்கள், 'மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என கூறுவார்கள். இது தான் நடக்கிறது. இது போன்ற முதல்வர் நமக்கு தேவையா.


சமீபத்தில் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1' தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியில், வணிக நிறுவனங்கள், தமிழகத்தை ஏன் முதலீட்டுக்கு விருப்பமான மாநிலமாக தேர்வு செய்கின்றன என்பது ஒரு கேள்வி. தமிழக முதல்வர், 10 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணவு ஒப்பந்த போடப்பட்டுள்ளது என்று பொய்யாக கூறியுள்ளார். அதில் எவ்வளவு நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது என கேட்டால், பதில் இல்லை. அதில், 50,000 முதல், 60,000 கோடி ரூபாய் வரை மட்டுமே முதலீடு செய்துள்ளார்கள்.


அடுத்து, தமிழக அரசு, 2025ம் ஆண்டு பட்ஜெட்டில், ரூபாய் சின்னத்தை மாற்றிவிட்டு, 'ரூ' சின்னத்தை பயன்படுத்தியது. இதெல்லாம் ஒரு கேள்வியா. டாஸ்மாக் கடையை மூடினால் வளர்ச்சி ஏற்படும், கஞ்சா போதையை ஒழியுங்கள் தானாக தமிழகம் வளர்ச்சி ஏற்படும். அடுத்ததாக ஒரு கேள்வி, தி.மு.க., எதற்காக இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியது. இதற்கான பதில், முதல்வர் ஸ்டாலினுக்கே தெரியாது.
இது, தி.மு.க., நடத்தவில்லை, தமிழக மாணவர்கள் நடத்தினார்கள். இதில், தி.மு.க.,வினர் பங்கேற்றனர். மற்றொரு கேள்வி, அண்ணாதுரை எதற்காக, தி.க.,வில் சேர்ந்தார். இதெல்லாம் ஒரு கேள்வி. இதற்கான விடை, தி.மு.க.,காரனுக்கே தெரியாது. அடுத்த கேள்வியாக, அண்ணாதுரை தி.க.,விலிருந்து பிரிந்து, தி.மு.க.,வை ஆரம்பித்தார் என கேள்வி கேட்க வேண்டியதுதானே. அதை கேட்க மாட்டார்கள். பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியது எல்லாம் ஒரு கேள்வி. தி.மு.க.,வை பற்றி கேள்வி கேட்க, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1' தேர்வு நடத்தப்படுகிறது.


வேலுார் மாநகரம் கஞ்சா மாநகரமாக மாறிவிட்டது. பாலாற்றில், 23 தடுப்பணைகள் கட்டியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை, 3 தடுப்பணைகள் மட்டுமே கட்டியிருக்கிறார்கள். தி.மு.க.,வில், உள்ள எம்.எல்.ஏ.,க்களில், வன்னியர்கள், 23 பேர், பட்டியல் இனத்தவர்கள், 21 பேர். ஆனால், இந்த, 2 சமுதாயத்திற்கு எதுவும் செய்யவில்லை. இந்த, 2 சமுதாயம் தான் உங்களை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறது. உங்களை சுற்றி வியாபாரிகளைத்தான் வைத்துள்ளீர்கள். இதை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டும் நேரம் வந்து விட்டது.


தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஏற்கனவே, 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, 4வது முறையாக வரும், ஜூலை, 1ம் தேதி முதல், 3.5 சதவீதம் மின்கட்டண உயர்வு உயர்த்தப்பட உள்ளது. மின்கட்டண உயர்வால், 45,000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்தும், 10,000 கோடி ரூபாய் நஷ்டம் என்கிறார்கள். அரசு, 3,200 கோடி யூனிட் மின்சாரத்தை தனியாரிடம் கொள்முதல் செய்கிறது.

அவை, ஒரு யூனிட், 11, 12, 13, 15, ரூபாய் என மாற்றி, மாற்றி வாங்குகிறது, அரசு ஒரு யூனிட் மின் உற்பத்தி செய்தால் செலவு, 3.25 ரூபாய் மட்டுமே. தனியாரிடம் மின்சாரம் கூடுதல் விலை கொடுத்து வாங்கி, எவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள் என, தெரிந்து கொள்ளுங்கள். அரசு கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யுங்கள் என்கிறோம், ஆனால், கூடுதல் மின்சாரம் அரசு தயாரில்லை.
இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement