செங்கையில் சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு: 12 உறுப்பினர்கள் 'ஆப்சென்ட்'

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பல்வேறு திட்டப்பணிகளை, சட்டசபையின் பொது கணக்கு குழுவினர், நேற்று, ஆய்வு செய்தனர். இதில், 13 சட்டசபை உறுப்பினர்கள் பங்கேற்க வில்லை.

செங்கல்பட்டு மாவட்டத்தில், சட்டசபையின் பொது கணக்கு குழு தலைவர் ஸ்ரீபெரும்புத்துார் காங்.,- எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை தலைமையில், நேற்று, ஆய்வு செய்தனர். குழுவின் உறுப்பினர்களான ஐயப்பன், எழிலரசன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அப்துல் சமது, சிவக்குமார், சேகர் ஆகிய ஆறு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

வண்டலுார் தாலுகா அலுவலகத்தில், பட்டா உள்ளிட்ட கோப்புக்களை ஆய்வு செய்தனர். மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள, நர்சரி நாற்றங்கல், கூடுவாஞ்சேரி தோழி விடுதி, தைலாவரத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிப்புக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்தர, பொதுமக்கள் குழுவினரிடம் மனு அளித்தனர். சிங்கபெருமாள்கோவில் மேம்பால பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

தொடர்ந்து செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது.

இதில், தாம்பரம் மாநகராட்சி, நகராட்சி, கனிமளவத்துறை, சமூக நலத்துறை நெடுஞ்சாலைத்துறை, வணிகவரித்துறை உள்ளிட்டத்துறைகளின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்தனர்.

கலெக்டர் அருண்ராஜ், முதன்மை செயலர் சீனிவாசன், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, திருப்போரூர் வி.சி.,- எம்.எல்.ஏ., பாலாஜி, மாவட்ட வருவாய் அலுலவர் கணேஷ்குமார், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சட்டசபை பொது கணக்கு குழுவில் தலைவர் உட்பட 19 பேர் உள்ளனர். இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட 12 உறுப்பினர்கள் வரவில்லை.

Advertisement