மக்கள் நல அரசு வெறும் வார்த்தையா? டாஸ்மாக் வழக்கில் ஐகோர்ட் காட்டம்

மதுரை:டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மதுரை நிலையூர் மேகலா பொதுநல மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

ஆண்டுதோறும், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு தெரிவித்தது. குறிப்பிட்ட பகுதியில் மது விற்பனை குறைந்ததும் வேறு இடத்திற்கு டாஸ்மாக் கடை மாற்றம் செய்யப்படுகிறது.

மக்கள் நல அரசு என்பது வெறும் வார்த்தை அல்லது கொள்கை அளவில் மட்டும்தானா?

தெருக்கள் தோறும் டீக்கடைகள் உள்ளதை போல், நினைத்த நேரம் மது அருந்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் அருகருகே துவக்கப்படுகின்றன.

ஐந்து ஆண்டுகளாக செயல்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு, மது போதை மறுவாழ்வு மையங்கள் எத்தனை செயல்படுகின்றன போன்ற விபரங்களை தமிழக அரசு ஜூன் 23ல் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

அதே போல, தஞ்சாவூர் எம்.கே.எம்., ரோடு டாஸ்மாக் கடை, முதல்வரின் தஞ்சை வருகையின் போது மூடப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட், 'வி.ஐ.பி.,க்கள் எப்போது வந்தாலும் இப்பகுதி டாஸ்மாக் கடை மூடப்படுமா? ஜூன் 15, 16ல் எதற்காக அக்கடை மூடப்பட்டது என்பது குறித்து தஞ்சாவூர் எஸ்.பி., ஜூன் 23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.

Advertisement