50 வயது மகள் அடித்துக் கொலை 80 வயது தந்தை தலைமறைவு

திருநெல்வேலி:திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மகள் தன்னை கவனிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொலை செய்த 80 வயது தந்தை நடப்பதற்கு உதவும் வாக்கருடன் தலைமறைவானார்.

துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருரை சேர்ந்தவர் வேலு 80. மகள் ஜெயலட்சுமி 50. இவர் கணவர் காளமுத்து 55, மற்றும் மகனுடன் திருநெல்வேலி மேலப்பாளையம், மேல கருங்குளத்தில் வசித்து வருகிறார். தந்தையை ஜெயலட்சுமி தான் கவனித்து வந்தார்.

நேற்று மதியம் அவருக்கு உணவு அளித்துவிட்டு ஜெயலட்சுமி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் தனக்கு சரியாக சாப்பாடு தரவில்லை. சரியாக கவனிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் வேலு, ஜெயலட்சுமி தலையில் கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தான் நடப்பதற்கு உதவும் வாக்கருடன் வீட்டை விட்டு வெளியே கிளம்பி சென்று விட்டார். வேலைக்குச் சென்றிருந்த ஜெயலட்சுமியின் கணவர் இரவில் வீடு திரும்பியபோது மனைவி கொலை செய்யப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தலைமறைவான வேலுவை மேலப்பாளையம் போலீசார் தேடிவருகின்றனர்

Advertisement