செங்குன்றம் சாலையில் சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு பணி மந்தம்

திருவள்ளூர்:திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில், சேதமடைந்த வெள்ளியூர் குழாய் சீரமைப்பு பணி ஆமை வேகத்தில் நடப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில், 65,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

நகராட்சியில், வீட்டு குழாய் மற்றும் தெரு குழாய் வாயிலாக, தினமும் 50 லட்சம் லிட்டர் அளவு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக, பட்டரைபெரும்புதுார், புங்கத்துார் உட்பட 13 இடங்களில், ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

கடந்த 2004ம் ஆண்டு வெள்ளியூரில் இருந்து கொற்றலை ஆற்றின் கரையோரம், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இங்கிருந்து, தினமும் 35 லட்சம் லிட்டர் அளவிற்கு குடிநீர் எடுக்கப்பட்டு, திருவள்ளூர் நகராட்சிக்கு விநியோகிக்கப்படுகிறது.

இவ்வாறு பெறப்படும் குடிநீர், நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட, 13 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரித்து, தெரு குழாய்கள், வீட்டு இணைப்பு குழாய்கள் வாயிலாக, தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

வெள்ளியூரில் இருந்து திருவள்ளூர் வரும் குடிநீர் குழாய், ஈக்காடு கண்டிகை அருகில் அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்டது. அதை சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, குழாய் உடைப்பை தவிர்க்க, புதிய குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement