அ.தி.மு.க., உடன் கூட்டணியா: திருமாவளவன் சொல்வது இதுதான்!

3

மதுரை: ''பா.ம.க., பா.ஜ., இருக்கும் அணியில் இருக்க மாட்டோம். பா.ஜ., உள்ளதால் அ.தி.மு.க., அணியில் சேர முடியாது,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.


மதுரையில் நடந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டு உள்ளது. விடுதலை சிறுத்தைகள் இந்த தேர்தலில் மிக முக்கிய துருப்புச்சீட்டாக உள்ளது. தினமும் நம்மிடம் தேர்தல் குறித்து கேள்வி கேட்கின்றனர். எத்தனை சீட் கேட்க போகிறீர்கள்? கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? அடிக்கடி தி.மு.க., உடன் விரிசல் வருகிறதே? என கேட்கின்றனர்.


ஆளுங்கட்சி உடன் கூட்டணி இருந்தால் விரிசல் வரத்தான் செய்யும். எதிர்க்கட்சி உடன் இருந்தால் வரப்போவது கிடையாது. ஆளுங்கட்சியுடன் கூட்டணி என வரும் போது, போலீசுடன் பிரச்னை வந்தாலும், அதிகாரிகளுடன் பிரச்னை வந்தாலும் ஆளுங்கட்சியுடன் நெருக்கடி வரத்தான் செய்யும்.

அரசியல் கட்சி கொடி அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டதும்,
போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு திருநெல்வேலி அல்வா சாப்பிட்டது போன்று ஆகிவிட்டது.


விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை மட்டும் அகற்றினர். அவ்வளவு அரசியல் காழ்ப்புணர்ச்சி, அதிகார வர்க்கத்திடம் மேலோங்கி இருக்கிறது. கட்சிக் கொடி அமைக்கும் போது எல்லாம் போலீசார் தடுப்பார்கள். ஆனால், நாங்கள் ஆளுங்கட்சி கூட்டணி தான். இதனை எதிர்கொண்டு போராடிக் கொண்டே ஆளுங்கட்சி கூட்டணியில் நீடிக்கிறோம்.


ஏன் கசப்பு; சண்டை தானே. வெளியே வர வேண்டியது தானே என கேட்கிறார்கள். அரசியல் களத்தில் நாம் இருக்கும் போது எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். தமிழக அரசியல், அகில இந்திய அரசியல், தமிழக மக்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். அரசியலில் பொறுமை, சகிப்புத்தன்மை தேவை.


நமக்கு ஆதரவான சக்திகள் யார் என்பதில் தெளிவு தேவை. கொள்கை அடிப்படையில் நமது எதிரிகள் யார் என்பதை முடிவு செய்வதில் ஒரு துணிவு தேவை. இதனால் தான், வெளிப்படையாக முடிவெடுத்து சொல்கிறோம். பா.ம.க., பா.ஜ., இருக்கும் அணியில் ஒரு போதும் சேர மாட்டோம் . அ.தி.மு.க.,வுடன் சேரலாம். ஆனால், பா.ஜ., உள்ளதால் சேர முடியாது.

மிரட்டி அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை. அதற்காக அரசியல் வரவில்லை. 4 பேரை 5 பேர் ஆக்குவதாலும், 5 பேரை 10 பேர் ஆக்குவதாலும் புரட்சி ஏற்படப்போவதில்லை. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வளர வளர வார்த்தைகளில் கவனம் தேவை. சமூக ஊடகங்களில் பதிவு செய்யும் போது முதிர்ச்சியாக இருக்க வேண்டும். உட்கட்சி பிரச்னை பற்றி எழுதக்கூடாது.


மதத்தின் பெயரால், கடவுள் பெயரால் அரசியல் செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ் தேசியம் என்ற பெயரில், ஈ.வெ.ராமசாமி என்ன செய்தார் என கேட்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Advertisement