ஷர்துல் தாகூரா... நிதிஷ் குமாரா * முதல் டெஸ்ட் நாளை துவக்கம்

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் யார் யார் இடம் பெறுவர் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2025-2027 சீசன் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை லீட்சில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோகித் சர்மா, கோலி, அஷ்வின் என சீனியர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால் இளம் வீரர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தவிர, முதல் டெஸ்டில் களமிறங்கும் லெவன் அணியில் யார் யார் இடம் பெறுவர் எனத் தெரியவந்துள்ளது.
சுதர்சன் எப்படி
துவக்கத்தில் ஜெய்ஸ்வால், ராகுல், அடுத்து சுப்மன் கில், 7 ஆண்டுக்குப் பின் அணிக்கு திரும்பிய கருண் நாயர் என 4 வீரர்களுக்கு இடம் உறுதி. இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது எனத் தெரிகிறது. பின் வரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், 'ஆல் ரவுண்டர்களாக' நிதிஷ் குமார், 'சீனியர்' ஜடேஜா சேர்க்கப்படுவர்.
இதனால் 'ஆல் ரவுண்டர்' ஷர்துல் தாகூர் இடமும் சந்தேகம் தான். சமீபத்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஷர்துல் 122 ரன் விளாசினார். கடந்த 2023 இங்கிலாந்து தொடரில் 4 டெஸ்டில் 3 அரைசதம் அடித்தார். எனினும் இந்திய அணி நிர்வாகம், ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த நிதிஷ் குமாருக்கு முதன் முறையாக வாய்ப்பு தரலாம்.
சுழலில் குல்தீப், வேகப்பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜுடன், சமீபத்திய பிரிமியர் தொடரில் அதிக விக்கெட் சாய்த்த பிரசித் கிருஷ்ணா கூட்டணி களமிறங்கும். இதனால் அர்ஷ்தீப் சிங் அறிமுக வாய்ப்பு தாமதம் ஆகலாம்.
கோலி-சுப்மன் சந்திப்பு
தற்போது லண்டனில் உள்ள கோலி, புதிய கேப்டன் சுப்மன் கில், துணைக் கேப்டன் ரிஷாப் உள்ளிட்ட இந்திய வீரர்களை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். வரும் டெஸ்ட் தொடர் குறித்தும், இங்கிலாந்தில் தனது அனுபவங்கள் குறித்தும் இளம் வீரர்களிடம் கோலி பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.
ரயில் பயணங்களில்...
இந்திய அணி வீரர்கள் லண்டனில் இருந்து முதல் டெஸ்ட் நடக்கவுள்ள லீட்சிற்கு ரயிலில் பயணம் செய்தனர். இதுகுறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்டது. ரயில் பயணத்தில் வீரர்கள் தங்களது குழந்தை பருவ அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 'ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து, இமாச்சல பிரதேசத்தில் மலைப்பகுதியில் பயணம் செய்துள்ளதாக', துருவ் ஜுரல் தெரிவித்தார்.
'12, 14 வயது பயிற்சி முகாமில் பங்கேற்க, சேப்பாக்கம் மைதானத்துக்கு ரயிலில் சென்ற அனுபவத்தை,' சாய் சுதர்சன் பகிர்ந்து கொண்டார். அப்போது ஷர்துல் தாகூர் கூறுகையில்,'' மும்பையில் பயிற்சிக்கு செல்ல ரயிலை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் தற்போது, இருக்கையில் அமர்ந்து, அமைதியாக செல்கிறேன்,'' என்றார்.
9 வெற்றி
இங்கிலாந்தில் இந்திய அணி பங்கேற்ற 67 டெஸ்டில் 9ல் தான் வென்றது. 36ல் தோற்றது. 22 போட்டி 'டிரா' ஆகின.
* ஒட்டுமொத்தமாக இரு அணிகள் மோதிய 136 டெஸ்டில், இந்தியா 35, இங்கிலாந்து 51ல் வென்றன. 50 போட்டி 'டிரா' ஆனது.
இங்கிலாந்து அணி அறிவிப்பு
முதல் டெஸ்டில் பங்கேற்கும் 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி, 48 மணி நேரத்துக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஜாக் கிராலே, டக்கெட், போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜமை ஸ்மித், வோக்ஸ், கார்ஸ், ஜோஷ் டாங்கு, சோயப் பஷிர்.
மேலும்
-
ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஜினியர் கைது
-
பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது
-
மைசூரில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.1.20 லட்சம் உயிரை பணயம் வைத்து தோணியில் சென்று வரும் மக்கள்
-
தண்ணீரை வீணாக்க மாட்டோம் என உறுதிமொழி 5.33 லட்சம் பேர் பங்கேற்று 'கின்னஸ்' சாதனை
-
அரசு பஸ்சில் சீட் சண்டை இளைஞருக்கு கத்தி குத்து