பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

பல்லாரி: பெண்களை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தவரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

கல்லுாரி மாணவி ஒருவர், தன் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வலம் வருவதாக மும்பை போலீசாரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகார் செய்திருந்தார். இந்த புகாரை மும்பை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில், பல்லாரி, சந்துார் டவுனை சேர்ந்த சுபம் குமார் மனோஜ்பிரசாத் சிங், 25, என்பவருக்கு தொடர்பு இருக்கலாமென சமீபத்தில் மும்பை சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

விசாரணையில், அந்த மாணவி அளித்த புகாரில் குறிப்பிட்ட நபர் தான் என்பதை போலீசார் உறுதிசெய்தனர்.

இதையடுத்து, சந்துார் டவுனுக்கு வந்த மும்பை போலீசார், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்த சுபம் குமாரை கைது செய்தனர்.

அவரது மொபைல் போனை சோதனை செய்ததில், 13,500க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண படங்கள், வீடியோக்கள் இருப்பது தெரிந்தது.

அவர், 90 போலி மின்னஞ்சல் முகவரிகள், பத்து போலியான சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி பெண்களின் நிர்வாண படங்களை வெளியிட்டு வந்தது தெரிந்தது.

விசாரணையில், பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அவர்களுக்கு அனுப்பி சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுவார்.

சம்பந்தப்பட்ட பெண்களை, நிர்வாணமாக வருமாறு வீடியோ காலில் அழைப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

இதற்கு சம்மதிக்காத பெண்களின் புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் ஆபாசமாக வெளியிட்டு வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக இது போன்று செய்து வந்துள்ளார்.

இவரிடம் எத்தனை பெண்கள் சிக்கினர் என்பது குறித்து மும்பை போலீசாரும், பல்லாரி போலீசாரும் விசாரிக்கின்றனர்.

Advertisement