தரமற்ற விதை, பூச்சிக்கொல்லி தடுக்க விரைவில் சட்டத்திருத்தம்

புதுடில்லி: விதைகள், பூச்சிக்கொல்லிகளின் தரம் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதால், சட்டவிதிகளை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

விவசாயிகளுக்கு தரமான விதைகள், பூச்சிக்கொல்லி ரகங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தரமற்ற பொருட்கள் விற்பனை தொடர்பாக, விவசாயிகள் புகார் தெரிவித்த நிலையில், விதைகள், பூச்சிக்கொல்லி தயாரிப்பு, விற்பனைக்கு சட்டவிதிகளை கடுமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் அதிகளவில் நடத்தப்பட்டு வருகின்றன. பூச்சிக்கொல்லிகள் உரிய பலனை தருவதில்லை என்றும்; விதைகள் தரமின்றி இருப்பதாகவும், நாட்டின் எல்லா பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் என்னிடம் தெரிவிக்கின்றனர்.

விதைகள் சட்டம்-1966ல் திருத்தங்களை செய்து, விவசாயிகளின் நலன் காக்கப்படும். சான்றளிக்கப்படாத விதைகள் விற்பனையை தடுக்கவும்; விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதத்தை கடுமையாக அதிகரிக்கவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.

இதேபோல, போலி பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனையை தடுக்க, பூச்சிக்கொல்லி சட்டம்-1968ல் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கூறினார்.

Advertisement