'குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26,000 தொழிலாளருக்கு வழங்க வேண்டும்'

திருப்பூர்: தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச மாத ஊதியமாக, 26 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டுமென, அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருப்பூர் ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட பொதுசெயலாளர் நடராஜன் தலைமை வகித்தார்.

எல்.பி.எப்., அகில இந்திய தலைவர் நடராஜன், ஏ.ஐ.டி.யு.சி., தேசிய செயலாளர் வஹிதா நிஜாம், சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் ரங்கராஜன், எச்.எம்.எஸ்., மாநில செயலாளர் ராஜாமணி, எம்.எல்.எப்., மாநில செயலாளர் கல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும், குறைந்தபட்சம் மாதம், 26 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்; ஓய்வூதியமாக, 9,000 ரூபாய் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு நிதி ஒதுக்க வேண்டும். விவசாய தொழிலாளர் பயன்பெறும் வகையில், வேலை உறுதி திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 9ல் நடைபெற உள்ள தேசிய அளவிலான பொது வேலை நிறுத்த போராட்டத்தை, வெற்றி பெற செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement