மனைவிக்கு தங்கத்தில் தாலி வாங்க ஆசை: 93 வயது முதியவருக்கு கிடைத்த 'சர்ப்ரைஸ்'

5

மும்பை: மஹாராஷ்டிராவில், 93 வயதிலும் தன் மனைவி மீதான அன்பில், தங்கத்தில் தாலி சங்கிலி வாங்கித்தர ஆசைப்பட்ட கணவரின் காதலுக்கு பரிசாக, அதை இலவசமாக வழங்கி நகைக்கடை உரிமையாளர் திக்குமுக்காட செய்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்போரா ஜஹாகிர் கிராமத்தின் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த முதியவர் நிவ்ருத்தி ஷிண்டே, 93. அவரது மனைவி சாந்தாபாய். தற்போது ஆஷாதி ஏகாதசி கொண்டாட்டத்திற்காக பந்தர்பூருக்கு இருவரும் கால்நடையாக யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள நகைக்கடைக்கு இருவரும் சென்றனர். வெள்ளை குர்தா மற்றும் தொப்பி அணிந்தபடி ஏழ்மையான நிலையில் இருந்த அவரைப் பார்த்த ஊழியர்கள் யாசகம் கேட்டு வந்ததாக முதலில் நினைத்தனர். ஆனால் அந்த முதியவர், தன் மனைவிக்கு தாலி சங்கிலி வாங்க வேண்டும் என கூறியதை கேட்டு ஆச்சரியப்பட்டனர்.

தள்ளாத வயதிலும், முதியவரின் ஆழமான காதலைக் கண்டு அசந்து போன கடை உரிமையாளர், அவருக்கு அந்த நகையை பரிசாக அளித்தார்.

''கடைக்கு வந்த வயதான தம்பதி, 1,120 ரூபாய் கொடுத்து, தங்கத்தில் தாலி சங்கிலி வேண்டும் என்றனர். அவரது அன்பு என்னை ஆச்சரியப்பட வைத்தது. ஆசிர்வாதத்தின் அடையாளமாக நான் அவரிடமிருந்து 20 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு நகையை கொடுத்தேன்,'' என, கடை உரிமையாளர் கூறினார்.

'இந்த ஜோடி எப்போதும் இணை பிரியாமல் இருப்பர். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனாலும் அவர்கள் பெரும்பாலும் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வர்' என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இந்த வயதான தம்பதியின், 'வீடியோ' இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement