சேதமடைந்த தடுப்பு சுவர் சாலையோரம் மண்சரிவு ஆபத்து

கூடலுார்: 'கூடலுார் ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியை ஒட்டி சேதமடைந்துள்ள தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலுார் ஓவேலி சாலை சோதனை சாவடி அருகே, அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. விடுதியை ஒட்டி, ஓவேலி சாலையோரம், மண்சரிவு ஏற்படுவதை தடுக்க, கருங்கற்களால் தடுப்பு சுவர் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தடுப்புச் சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது. சாலையோரம் மண்சரிவு ஆபத்து உள்ளதால் அதனை சீரமைக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை.

மக்கள் கூறுகையில், 'தற்போது பெய்து வரும் பருவ மழையில், தடுப்பு சுவர் மேலும் சேதமடைந்து, அதனை ஒட்டிய ஓவேலி சாலையோரம் மண்சரிவு ஆபத்து உள்ளது. இதனை தடுக்க, சேதமடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement