'சனாதன தர்மமே நமது நாட்டின் அடையாளம்'; சொற்பொழிவில் அறிவுறுத்தல்

சூலூர் : சனாதன தர்மமே நம் பாரத நாட்டின் அடையாளம் ஆகும், என, அறம் வளர்த்த நாயகி சேவை மைய நிறுவனர் மணிகண்டன் பேசினார்.

முத்துக்கவுண்டன்புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், மாதாந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு விவேகானந்தர் அரங்கத்தில் நடந்தது. இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

சென்னையை சேர்ந்த அறம் வளர்த்த நாயகி சேவை மைய நிறுவனர் மணிகண்டன் பேசியதாவது:

சனாதன தர்மமே நமது பாரத நாட்டின் அடையாளம் ஆகும். பார்சியர்கள் நமது நாட்டுக்கு சிந்து நதியை கடந்து வந்தனர். அவர்கள் நம்மை ஹிந்து என, அழைத்தனர். அதை நாம் ஏற்றுக் கொண்டோம். இமயமலை முதல் இந்து மகா கடல் வரை உள்ள புண்ணிய பூமி. தேவர்களால் உருவாக்கப்பட்ட பகுதி. அதனால், ஹிந்துஸ்தானம் என அழைக்கப்பட்டது. சனாதனம் என்பது பல்லாயிரம் ஆண்டு காலம் பின்பற்றி வரும் ஒரு வாழ்க்கை முறை ஆகும். ஹரியானா மாநிலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில், கிடைத்த களிமண் சிற்பங்கள் நம் பழமைக்கு சான்றாக உள்ளன.

தற்போது, சனாதன தர்மத்தை அழிக்க, பல்வேறு வழிகளில் சதி திட்டங்கள் தீட்டப்படுகின்றன.கோடிக்கணக்கானோர் உயிர் தியாகம் செய்து காப்பாற்றிய தர்மத்தை நாமும் காப்பாற்ற வேண்டும்.சனாதன தர்மம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்காக, சேவை மையத்தின் சார்பில், சனாதன விழிப்புணர்வு விஜய யாத்திரை நடத்தப்பட உள்ளது. 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், 18 சித்தர்கள்,15 சித்தர்களின் திருவுருவ சிலைகளின் யாத்திரை, 108 இடங்களில் துவங்க உள்ளது. ஒவ்வொரு திருவுருவ சிலையும், தமிழகத்தில், 60 இடங்களுக்கு யாத்திரை செல்ல உள்ளது. வரும், ஜூன் 26 துவங்கி, ஜூலை, 5 வரை நடக்க உள்ளது. அதற்கு உங்கள் ஆதரவு தேவை. உங்கள் பகுதிக்கு வரும் யாத்திரைக்கு வரவேற்பு அளித்து, அந்த நாயன்மார்களின் இறை பணியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement