குப்பை ெகாட்டும் இடமாக மாறிய தென்பெண்ணையாறு அவலம்; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருக்கோவிலுார், ஆற்றங்கரை நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டான நகரம். கோவில்கள் நிறைந்த அழகிய ஊர். வற்றாத ஜீவ நதியான தென்பெண்ணையில் பக்தர்களும், பொதுமக்களும் இறங்கி குளிப்பதற்கு வசதியாக பஸ் நிலையம் எதிரில் படித்துறை இருந்தது.

தைத்திங்கள் உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில், உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெறும் வைபவங்களில், பெருமாள் இந்த படித்துறையின் வழியாக எழுந்தருளி ஆற்றில் தீர்த்தவாரி காண்பது வழக்கம். இதிகாச புராணங்களில் கூறப்பட்டிருக்கும் பெருமைமிகு தீர்த்தங்களில் 'கிருஷ்ணபத்ரா' எனப்படும் தென்பெண்ணை ஆறும் ஒன்று.

பழமையும், பெருமையும், புராதானமும் மிக்க இந்த ஆறு, இன்று குப்பைகள் கொட்டும் இடமாகவும், கழிவுநீர் கலக்கும் இடமாகவும் மாறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் ஆலை கழிவுகள் அனைத்தும் இந்த நதியில் தான் கலக்கிறது.

இது ஒரு புறம் என்றால் தமிழகத்தில் குறிப்பாக திருக்கோவிலுாரில், ஆற்றை ஒட்டி இருக்கும் பகுதிகளில் சமூக விரோதிகள் குப்பையை கொட்டி நிரப்பி ஆக்கிரமித்துள்ளனர்.

இப்பகுதியில் வளர்க்கப்படும் பன்றிகள் இந்த குப்பையை கிளறி விடுகின்றன. நகரின் கழிவு நீர் ஆற்றில் கலக்கும் அவலமும் அரங்கேறுகிறது.

அதிகாரிகளின் அலட்சியம்



இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

தென்பெண்ணையில் கழிவுகள் கலப்பதை கர்நாடக அரசு தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக எல்லையில் குறிப்பாக திருக்கோவிலுார் பகுதியில் ஆற்றை தூய்மைப்படுத்த பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என்பது தான் கேள்வியாக உள்ளது.

தென்பெண்ணையாற்றில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்திவிட்டது தான் மிச்சம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி தென்பண்ணையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மணல் கொள்ளை தடுக்கப்படுமா?



இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:

திருக்கோவிலுார் புறவழிச் சாலை உயர்மட்ட பாலத்தில் இருந்து சைலோம் வரை தென்பெண்ணை ஆற்றை ஒட்டி இருக்கும் ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றி, வேலி அமைத்து பூங்கா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கலாம். அத்துடன் பஸ் நிலையம் அருகே மறைக்கப்பட்ட படித்துறையை மீட்டெடுப்பதுடன் மேலும் பல இடங்களில் படித்துறையை உருவாக்கி பக்தர்கள் இறங்கி குளிக்க வழி ஏற்படுத்தலாம்.

இதன் மூலம் ஆறு மாசுபடுவதை தடுக்கலாம். ஆற்றின் மறு கரையில் மணம்பூண்டியில் தினசரி அரங்கேறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவதன் மூலம் ஆறு இழந்த பொலிவை மீண்டும் பெற முடியும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement