சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணிகள் குறித்து ஆய்வு

அவிநாசி : அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் மற்றும் மண்டபம் கும்பாபிஷேக திருப்பணிகள் செய்ய ஆய்வு நடத்தப்பட்டது.

கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரலாற்று சான்று உடையதாக விளங்கும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் மங்கலம் ரோட்டில், தாமரை குளத்தின் கரையில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து சுவர்களில் விரிசல் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள மண்டபங்களில் உள்ள தூண்கள் இடிந்து விடும் நிலையிலும் காணப்பட்டது.

திருப்பணி செய்து, கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென, சிவனடியார்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, ஹிந்து அறநிலையத்துறை செயற்பொறியாளர் ஆனந்த்ராஜ், துணை நிர்வாக பொறியாளர் சத்யா, உதவி பொறியாளர் கார்த்திக், கோவில் செயல் அலுவலர் சபரிஷ்குமார், ஆகியோர் நேற்று கோவில் ஆய்வு மேற்கொண்டு, திருப்பணிகள் துவங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணி உபயதாரர்கள், அறங்காவலர்கள், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சார்யார்கள் பங்கேற்றனர்.

'கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் துவங்கும்; பணிகள் நிறைவுற்ற பின், கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்படும்,' என்று அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement