ராமேஸ்வரத்தில் சிக்கிய 120 டன் இறால் மீன்கள் விலை கிடைக்காததால் மீனவர்கள் அதிருப்தி

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் படகில் சிக்கிய 120 டன் இறால் மீனுக்கு விலை நிர்ணயிக்காமல் ஏற்றுமதி வியாபாரிகள் மவுனம் காப்பதாக அதிருப்தி தெரிவித்த மீனவர்கள் அவர்கள் சிண்டிகேட் அமைத்து செயல்படுகின்றனரா என கேள்வி எழுப்பினர்.

ஜூன் 17 இரவு ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து 1200 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று முன்தினம் கரை திரும்பினர். இதில் சராசரியாக ஒரு படகில் 100 கிலோ இறால் மீன்கள் சிக்கின. மொத்தம் 120 டன் (1.20 லட்சம் கிலோ) இறால் மீன்களை துாத்துக்குடி, கன்னியாகுமரியில் உள்ள தனியார் ஏற்றுமதி வியாபாரிகள் வாங்கினர். இவர்களுக்கு ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட இடைதரகு வியாபாரிகள் வாங்கி கொடுப்பது வழக்கம்.

கடந்தாண்டு மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு ஒரு படகில் சராசரியாக 300 கிலோ இறால் என 360 டன் சிக்கிய நிலையில் தற்போது 120 டன் சிக்கியதால் மீனவர்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவில் அதுவும் ஒரு கிலோவுக்கு 28 முதல் 30 எண்ணிக்கையில் இறால்கள் இருந்தும், 2 நாள்கள் ஆகியும் வியாபாரிகள் விலை நிர்ணயிக்காமல் மவுனமாக உள்ளனர். சிண்டிகேட் குழு அமைத்து விலையை குறைக்க அவர்கள் திட்டமிட்டு உள்ளார்கள் என மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சகாயம் கூறியதாவது : மீன்பிடி தடை காலத்திற்கு முன் ஒரு கிலோ இறால் ரூ. 650க்கு விற்றோம். தற்போதும் அதே எண்ணிக்கை இறால் அதுவும் 3ல் இரண்டு மடங்கு குறைவான அளவில் சிக்கியும் ஏற்றுமதி வியாபாரிகள் விலை நிர்ணயிக்காதது ஏமாற்றமாக உள்ளது. இந்த விலை நிர்ணயிப்பதில் வியாபாரிகள் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். மீன்பிடிக்க செல்ல படகிற்கு தலா ரூ. ஒரு லட்சம் செலவான நிலையில் குறைவாக சிக்கிய மீன்களுக்கும் உரிய விலை கிடைக்காவிடில் கடன் தொல்லையில் சிக்கும் அவலம் உள்ளது என்றார்.



Advertisement