ரூ.14.30 லட்சம் மோசடி கோவை தம்பதி சிக்கினர்

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம், பெரியார் நகரை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் மனைவி மகாலட்சுமி, 39; எம்.ஏ., - பி.எட்., முடித்துள்ள இவர், தையல் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது சகோதரரை ஸ்பெயின் நாட்டிற்கு அனுப்பிய சாம்சன் என்பவர் வாயிலாக, கோவையை சேர்ந்த அசோக்குமார், 41, இவரது மனைவி விஜயதாரணி லட்சுமி, 39, ஆகியோர் அறிமுகமாகினர்.

இவர்கள், சென்னை தலைமை செயலகத்தில், கல்வித்துறையில் உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் எனவும், அவர்கள் வாயிலாக வணிகவரித்துறையில் இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாக, மகாலட்சுமியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். நம்பிய அவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன், 3 லட்சம் ரூபாயை கொடுத்தார்.

அப்போது, மேலும் ஐந்து பேருக்கு வேலை இருப்பதாக கூறி, மொத்தமாக, 14.30 லட்சம் ரூபாயை பெற்றனர். அதன்பின், தம்பதியை தொடர்பு கொள்ள முடியவில்லை. மகாலட்சுமி ஜூன் 14ம் தேதி விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தார்.

விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். தனிப்படை போலீசார், கோவை, இடிகரை, சரவணா கார்டன் குடியிருப்பில் பதுங்கியிருந்த அசோக்குமார், விஜயதாரணியை நேற்று கைது செய்தனர்.

இதில், ஏழாம் வகுப்பு படித்த அசோக்குமார், எலக்ட்ரீஷியனாக வேலை செய்ததும், மகாலட்சுமியிடம் 14.30 லட்சம் ஏமாற்றியதும் தெரிந்தது. இது போல பலரை ஏமாற்றி, தம்பதி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தெரிந்தது.

Advertisement