மாங்காய் விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு

1

குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி மற்றும் அதை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,000 ஏக்கரில் விவசாயிகள் மா பயிரிட்டுள்ளனர். மாங்காய்களை ஆந்திர மாநிலம், சித்துார் பகுதியில் உள்ள ஜூஸ் கம்பெனிகளுக்கு வினியோகம் செய்து வந்தனர். இந்தாண்டு, ஆந்திர மாநிலத்தில் மாங்காய் விளைச்சல் அதிகரித்ததால், தமிழகத்தில் இருந்து வரும் மாங்காய்களை திருப்பி அனுப்பினர்.

தமிழக அரசுக்கு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மா விவசாயிகள், மாங்காய்களை சாலையில் கொட்டி பரதராமியில் கடந்த 16ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஆந்திர மாநிலத்தில் டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் மானியம் தருவதைப்போல், தமிழக அரசும் மானியம் வழங்க வேண்டும். வேலுார் மாவட்டத்தில் ஜூஸ் கம்பெனி துவங்க வேண்டும் என, கோரிக்கைகளை வைத்திருந்தனர்.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பரதராமியில் உள்ள வணிகர் சங்கத்தினர், மா விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நேற்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

Advertisement