குளத்தில் குப்பை கொட்டி எரிப்பதால் மக்கள் சிரமம்

தேனி: போடி ஒன்றியம், மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி வலையபட்டி மந்தைக்குளத்தில் குவிந்துள்ள குப்பையில் சமூக விரோதிகள் தீ வைப்பதால் ஏற்படும் நச்சுப்புகையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சியில் வலையபட்டி உள்ளது. இங்குள்ள மந்தைக்குளத்தில் மக்கள் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர்.
குளத்தில் குவிந்த குப்பையை அகற்ற மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.
இதனால் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. சமூக விரோதிகள் அவ்வப்போது குப்பையில் தீ வைப்பதால் அதிகளவில் நச்சுப்புகை பரவுகிறது. இதனால் மந்தைக்குளத்திற்கு எதிரே உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பெருமாள் கூறுகையில்,' மந்தைக்குளத்தில் கொட்டப்படும் குப்பையை அகற்ற ஊராட்சியிலும்,போடி பி.டி.ஓ.,விடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. நச்சுப்புகையால் அருகே குடியிருப்பு மக்களுக்கு உடல் நலம் பாதிக்கிறது.
குப்பையை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.