வரதர் கோவிலில் தங்க, வெள்ளி பல்லிகள் திருப்பணியால் தற்காலிகமாக இடமாற்றம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தங்க பல்லி, வெள்ளி பல்லி அமைந்துள்ள இடத்தில், திருப்பணி நடைபெறுவதால், வரும் 25ம் தேதி முதல், பல்லி தரிசனம் தற்காலிகமாக அதே பிரகாரத்தில் தெற்கு பக்கத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், மூலவர் சன்னிதியில் வெளிப்பிரகாரத்தில் வடக்கு பக்கத்தில், கச்சிவாய்த்தான் மண்டபத்திற்கு அருகில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி பல்லியை தொட்டு தரிசனம் செய்பவர்களுக்கு பல்லி முதலான தோஷம் நீங்கும் என ஐதீகம்.

இன்றும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பல்லி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி பல்லி அமைந்துள்ள பகுதியில் திருப்பணி நடைபெறுவதால், அதே பிரகாரத்தில் தெற்கு பக்கத்தில், பக்தர்கள் பல்லி தரிசனம் செய்வதற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையர், நிர்வாக தர்மகர்த்தா ஆர். ராஜலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வரதராஜ பெருமாள் கோவிலில், தங்க பல்லி, வெள்ளி பல்லி அமைந்துள்ள இடத்தில் பக்தர்களுக்கு வசதி செய்யும் நோக்கத்திற்காக திருப்பணி நடந்து வருவதால் பல்லி தரிசனம் தற்காலிகமாக அதே பிரகாரத்தில் தெற்கு பக்கத்தில் மாற்றப்பட்டுள்ளது.

இது தற்காலிகமான ஏற்பாடுதான். திருப்பணி முடிந்த 20 நாளில், வடக்கு திசையிலேயே திரும்பவும் பல்லி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என, பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கிட வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement