யோகாவை வாழ்வின் அங்கமாக கருத வேண்டும் கவர்னர் ரவி அறிவுரை

மதுரை: ''உலகிற்கு பாரதம் அளித்த கொடையான யோகா, உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தை வழங்கும் சக்தி வாய்ந்த ஆதாரம். அதனை இளையோர் தங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக கருத வேண்டும்,'' என, கவர்னர் ரவி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சேர்மன் முத்துராமலிங்கம் தலைமையில் யோகாசன நிகழ்ச்சி நடந்தது.

கவர்னர் ரவி காலை 7:55 மணிக்கு மைதானம் வந்தார். அமர்ந்திருந்த 10 ஆயிரம் மாணவர்களுக்கு இடையே உற்சாகமாக கையசைத்தபடி நடந்து சென்றார்.

தேசிய கீதத்தை அடுத்து தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின் மாணவர்களுக்கு யோகா தின வாழ்த்துகளை தெரிவித்து கவர்னர் பேசியதாவது:

யோகா என்ற கொடையை 2015ல் பாரதம் உலகிற்கு வழங்கியது. சர்வதேச அமைப்பு அங்கீகரித்ததையடுத்து ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் யோகப்பயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யோகாவானது பிராந்தியம், மொழிகளுக்கு அப்பாற்பட்டது. உலகளாவியது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ல் பகல் பொழுது நீடித் திருக்கும்.

பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், ஆற்றல்களுக்கும் சூரியக்கடவுள் ஆதாரமாக உள்ளார். பாரதத்தின் அறிவுரையை ஏற்று ஜூன் 21ல் சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

யோகாவை நமக்கு வழங்கியவர் ஆதியோகியான சிவபெருமான். பதஞ்சலி முனிவரால் யோகா போற்றப்பட்டது.

அவரை நினைவுகூர்ந்து, நன்றி செலுத்தும் வகையில் யோகா பயிற்சி மேற்கொள்கிறோம்.

இளையோர்கள் ஆலமரத்தின் சிறு விதைகள். உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தை வழங்கும் சக்தி வாய்ந்த ஆதாரமான யோகாவை இளையோர் தங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக கருத வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சேர்மன் முத்துராமலிங்கம் கூறுகையில், ''ஆசனங்கள் செய்தால் ஆஸ்பத்திரி செல்ல வேண்டிய அவசியமில்லை. எனவே மாணவர்கள் தினமும் ஒரு மணி நேரம் யோகாசனம் செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement