விதிமீறல்களால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

கோவை மாநகரில் அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், அவிநாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் மேம்பால கட்டுமான பணிகள் நடந்துவருகின்றன.

திருச்சி ரோட்டில் ஐயர் ஹாஸ்பிட்டல் அருகே துவங்கி கோவை அரசு மருத்துவமனைக்கு முன்பு இறங்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் ஓரளவு நெரிசல் குறைந்துள்ளது. இப்படி நெரிசலை தவிர்க்க கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேசமயம், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களால் நெரிசல் பிரச்னை மேலும் தலைதுாக்குகிறது. குறிப்பாக, ரோட்டின் ஓரமும், 'நோ பார்க்கிங்'கிலும் நிறுத்தப்படும் கார்களால், நேர்மையாக செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமங்களை சந்திக்கின்றனர்.

ஆர்.எஸ்., புரம், கலெக்டர் அலுவலகம் அருகே, கோவை அரசு கலை கல்லுாரி ரோடு, ராஜ வீதி, டவுன்ஹால், மேட்டுப்பாளையம் ரோடு, ஜீவா நகர், அவிநாசி ரோடு, பீளமேடு, பாலசுந்தரம் ரோடு, அண்ணா சிலை, போத்தனுார் மெயின் ரோடு, போத்துனுார்-நஞ்சுண்டாபுரம் ரோடு, காட்டூர், காளீஸ்வரா மில்ஸ் ரோடு, ராமநாதபுரம், நஞ்சப்பா ரோடு உள்ளிட்ட இடங்களில் இஷ்டத்துக்கு வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

குறிப்பாக, வி.ஐ.பி.,கள், அரசு உயர் அதிகாரிகள் வசிக்கும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இவ்விதிமீறல்கள் அதிகரித் துள்ளது. கோவை அரசு கலைக் கல்லுாரி அருகே மாலை நேரங்களில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துகின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். இதுபோன்ற இடங்களில் மாநகர போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி அபராத நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேசமயம், இடவசதி உள்ள பகுதிகளில் கட்டண முறையில் 'பார்க்கிங்' வசதியை ஏற்படுத்தினால் மாநகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் கிடைப்பதுடன், நெரிசல் பிரச்னைக்கும் ஓரளவு தீர்வு கிடைக்கும்!

Advertisement