சேதமடைந்த வாழைக்கு நிவாரணம் தினமலர் செய்தி எதிரொலி

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கலில் காட்டுப்பன்றிகளால் சேதம் அடைந்த வாழைக்கு தினமலர் செய்தி எதிரொலியாக நிவாரணம் கிடைக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிவகாசி அருகே திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி, ஆனைக்குட்டம் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் 50 க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர். கிணற்று பாசனத்தில் சாகுபடி செய்துள்ள வாழைகளில் தற்போது குலை தள்ளு பருவத்தில் இருந்தது. ஒரு சில ஏக்கரில் தற்போது வாழைக்கன்றுகளை நட்டுள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் காட்டு பன்றிகள் உணவிற்காக வாழை மரங்களை சேதப்படுத்துகின்றது.
வாழையை குலை தள்ளும்பருவத்தில் சேதப்படுத்தியும், தண்டுப் பகுதியில் உள்ள குருத்தினை சாப்பிடுட மரத்தையே அழிக்கின்றன. மேலும் புதிதாக நடப்பட்ட வாழைக் கன்றுகளையும் சேதப்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் கவலை அடைந்தனர். எனவே உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக சிவகாசி வனச்சரக அலுவலர் பூவேந்தன் சேதம் அடைந்த வாழை கன்றுகளை பார்வையிட்டார். தொடர்ந்து சேதமடைந்த வாழைக்கு நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.