சாலையில் கொட்டிய ஜல்லிக்கற்கள் சறுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்

பல்லாவரம், பல்லாவரம் - துரைப்பாக்கத்தை இணைக்கும் வகையில், ரேடியல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆறு வழிச்சாலையான இதை, நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, வேன், ஜல்லி, டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகம்.

ஜல்லிக்கற்கள், எம் - சாண்ட், மண் உள்ளிட்ட லோடு ஏற்றி செல்லும் வேன் மற்றும் லாரிகள், முறையாக தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்கின்றன.

இதனால், அந்த வாகனங்களில் இருந்து சிதறும் ஜல்லிக்கற்கள், எம் - சாண்ட் போன்றவை, சாலையில் குவியல் குவியலாக தேங்குவதும், அதனால் விபத்துகள் ஏற்படுவதும் தொடர் கதையாகிவிட்டது.

இந்நிலையில், அருள் முருகன் டவர் திருமண மண்டபம் எதிரே, நேற்று காலை, லாரியில் இருந்து சிந்திய ஜல்லிக்கற்கள், சில மீட்டர் துாரத்திற்கு பரவியிருந்தது.

வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும் காலை நேரத்தில், பரவிக்கிடந்த ஜல்லிக்கற்கள் மேல் சென்ற வாகன ஓட்டிகள், தடுமாறியபடி சென்றனர். சிலர், கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்தனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் சென்ற பெண்கள், முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

ரேடியல் சாலையில், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக, வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதனால், தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்லும், லாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement