போர் நிறுத்தம் எதிரொலி: விமான சேவைகளை படிப்படியாக துவக்குகிறது ஏர் இந்தியா

1


புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகள் வான்பரப்பை திறந்துள்ளதால், அந்த பகுதிகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கான விமான சேவையை படிப்படியாக துவக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.


இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நடந்து வருகிறது. இதனால், பஹ்ரைன், லெபனான், ஈராக், கத்தார் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.



@quote@இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டு உள்ளன. இதனையடுத்து மத்திய கிழக்கு நாடுகள் தங்களது வான்பரப்பை மீண்டும் திறந்துவிட்டுள்ளன. quote


இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் ஏர் இந்தியா விமான சேவை இன்று முதல் படிப்படியாக துவக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளுக்கு நாளை பெரும்பாலான விமானங்கள் இயக்கப்படும்.
ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்ட விமான சேவை இன்று முதல் படிப்படியாக இயக்கப்படும்.அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் கனடாவுக்கான விமான சேவை விரைவில் துவங்கும்.

போரின் தாக்கம் மற்றும் மாற்றுவழித்தடங்களில் இயக்கப்படுவதால், சில விமானங்கள் தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம்.ஆனால், இடையூறுகளை தவிர்க்கவும், விமானபோக்குவரத்தை மீண்டும் கட்டமைக்கவும் உறுதிபூண்டுள்ளோம். பாதுகாப்பற்றதாக மதிப்பிடப்பட்ட வான்வெளிகளை ஏர் இந்தியா தவிர்க்கும் எனத் தெரிவித்துள்ளது.

Advertisement