மின் சேமிப்பு திட்ட டெண்டர் பொண்டாடா குழுமம் பெற்றது

சென்னை:கட்டமைப்பு மற்றும் பொறியியல் நிறுவனமான 'பொண்டாடா ' குழுமம், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்திடமிருந்து 400 மெகாவாட் பேட்டரி மின்சார சேமிப்பு அமைப்பு திட்டத்துக்கான டெண்டரை பெற்றுள்ளது.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாளவிடுதி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டியில் 400 மெகாவாட் திறன் கொண்ட பேட்டரி மின்சார சேமிப்பு அமைப்பு நிறுவப்பட உள்ளது.

மின் தொகுப்பு நிலைத்தன்மையை மேம்படுத்தி, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை ஒருங்கிணைத்து, அதிகரிக்கும் மின்சாரத்தேவையை நிர்வகிப்பதே இதன் நோக்கமாகும்.

இதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில், பொண்டாடா குழுமம் வெற்றி பெற்றதையடுத்து, இத்திட்டத்தை முழுமையாக கட்டமைத்து இயக்க உள்ளது.

டான்ஜெட்கோ எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பொண்டடா குழுமத்திடமிருந்து 12 ஆண்டு கால பேட்டரி மின்சார சேமிப்பு கொள்முதல் ஒப்பந்தம் வாயிலாக இந்த சேவைகளைப் பெறும்.

இந்த அமைப்பு, நாள் ஒன்றுக்கு இரண்டு முறை சார்ஜ் செய்து, வெளியேற்றும் திறன் கொண்டது என்றும், இதன் வாயிலாக மாநிலத்துக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சார வினியோகம் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு வரும் 2027ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் மின் கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

தேசிய மின்சார சேமிப்பு அமைப்புக்கான திட்டம், மற்றும் 2030ம் ஆண்டுக்குள் மொத்த மின்தேவையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 50 சதவீத அளவுக்கு எட்டும் தமிழக அரசின் இலக்கை எட்ட இது உதவும். நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை 500 ஜிகாவாட்டாக அதிகரிப்பதிலும் இது பங்களிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாளவிடுதி, திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டியில் பேட்டரி மின்சார சேமிப்பு அமைப்பு நிறுவப்பட உள்ளது

Advertisement